மாடேறி மிதித்த கதைபோல் விமானத் துறையின் நிலை, இரண்டாயிரம் பறப்புகள் ரத்து!

உலகெங்கும் நேற்று மாலை நிலைவரத்தின் படி 2 ஆயிரத்து 116 விமானப் பறப்புகள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.அவை அனைத்தும் ஒமெக்ரோன் வைரஸ் காரணமாக ஏற்பட்ட சேவை முடக்கங்கள் என்று முன்னணி விமானசேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Flightaware இணையத் தளத்தின் தகவல்களின் படி நத்தாருக்கு முந்திய தினமாகிய நேற்று வெள்ளிக் கிழமை மாலை 16.46 மணிக்கு உலகெங்கும் 2,116 விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. அதே எண்ணிக்கை நேற்று முன்தினம் 2,231 ஆகும்.

அவற்றில் 499 பறப்புகள் அமெரிக்காவுடன் தொடர்புபட்ட விமானசேவைகள் ஆகும். விமான சேவைகள் திடீரென ரத்தாகிய காரணத்தால் பல்லாயிரக் கணக்கான பயணிகள் இடைவழிகளில் விமானநிலையங்களிலும் ஹொட்டேல்களிலும் சிக்கி அந்தரிக்கின்றனர்.

கடந்த 2019 இல் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் தொடங்கியதன் விளைவாய் அடியோடு படுத்த தொழில்துறைகளில் முதலிடத்தில் இருப்பது விமான சேவைத் துறை. டெல்ரா திரிபிடம் இருந்து தப்பிய உலகம் ஒமெக்ரோனிடம் மாட்டுப்பட்டிருக்கிறது. மெல்ல வழமைக்குத் திரும்பிக் கொண்டிருந்தசர்வதேச விமான சேவைகள் மீண்டும்பலத்த அடிவாங்கியிருக்கின்றன. ஒமெக்ரோன் அச்சம் காரணமாக நாடுகள் வான் வழிகளைத் துண்டித்தமையும் நத்தார்-புதுவருட காலப் பயணங்களைப் பயணிகள் பெருமளவில் ரத்துச் செய்திருப்பதும் விமானிகள், விமானப் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கு இலக்காகி இருப்பதும் விமானத் துறைக்கு மற்றொரு பேரிடியாக மாறியுள்ளது. “பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்த” கதையாக கொரோனா வைரஸ் விமானத்துறையை மற்றொரு தடவையும் ஏறி மிதித்திருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.