பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் இந்தோனேசியா கடலில் தத்தளித்த அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்தது.

மலேசியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வழியில் இந்தோனேசியக் கடலுக்குள் மாட்டுப்பட்டுக்கொண்ட ரோஹின்யா அகதிகள் ஒரு வழியாக இந்தோனேசியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

வியாழனன்று அந்தக் கப்பலை அச் பிராந்தியத்தின் Lhokseumawe துறைமுகத்திலிருந்து சர்வதேசக் கடலுக்குள் அனுப்பிவிடவே இந்தோனேசிய அரசு ஆயத்தங்களைச் செய்தது. ஆனால், கடல் கொந்தளிப்பு, காற்று மோசமாக இருக்கவே ஏற்கனவே உடைந்திருந்த அந்தக் கப்பலைக் கடலுக்குள் அனுப்புவதைத் தடுக்கும்படி ஐ.நா, அம்னெஸ்டி உட்பட்ட பல மனித உரிமை அமைப்புக்கள் இந்தோனேசிய அரசைக் கேட்டுக்கொண்டன.

கடைசி நிமிடத்தில் இந்தோனேசியா அந்த அகதிகளை அங்கே இறங்க அனுமதித்திருக்கிறது. நிலவும் கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். அகதிகளில் 105 பேர் மருத்துவ உதவி தேவையான நிலைமையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்