50 ஆயிரம் பள்ளி மாணவர்களுடன் 5 ஆயிரம் ஆசிரியருக்கும் தொற்று! திக்குமுக்காடுகிறது கல்வி நிர்வாகம்.

பாரிஸ் சிறைச்சாலையில் கைதிகள் 200 பேருக்கு கொத்தாக ஒமெக்ரோன்

மிக வேகமாகப் பரவிவருகின்ற ஒமெக்ரோன் வைரஸ் ஐனவரி இரண்டாவது வாரத்தில் அதாவது அடுத்த வாரமளவில் உச்சக் கட்டத் தொற்றை எட்டும் என்று நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த24 மணிநேரத்தில் 2லட்சத்து 61ஆயிரத்து 481 (261,481) புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றன. இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஒமெக்ரோன் வைரஸ் தொற்று பாடசாலைகளை இயக்க முடியாத நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. ஆசிரியர்கள் இடையே இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 631 என்றும், திங்களன்று பாடசாலைகள் ஆரம்பித்த பிறகு கடந்த நான்கு நாட்களில் மட்டும் தொற்றுக் கண்டறியப்பட்ட மாணவர்களது எண்ணிக்கை 47 ஆயிரத்து 453 என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. தொற்றுக்குள்ளான ஒன்பது ஆயிரம் வகுப்பறைகள் மூடப்பட்டிருக்கின்றன.

தொற்று உறுதியான மாணவர்களும்தொடர்புடையோருமாக வகுப்புகளுக்கு வராதவர்களது எண்ணிக்கை நாளாந்தம்பல ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. தொற்று மற்றும் தொற்றுடன் தொடர்புபட்ட தமது பிள்ளைகளைப் பாடசாலைகளில் இருந்து இடையில் வீட்டுக்கு அழைத்து அவர்களை வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்திப் பராமரிப்பதில் பெற்றோரும் பாதுகாவலர்களும் பெரும் சிரமங்களை அனுபவித்துவருகின்றனர்.

இதேவேளை, பாடசாலை ஆசிரியர்கள்அனைவருக்கும் மருத்துவர்கள் அணிகின்ற மிகு திறன் கொண்டமாஸ்க்குகளை (surgical masks) இம்மாத இறுதிக்குள் விநியோகிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் ஜீன் காஸ்ரோ இன்று தெரிவித்திருக்கிறார். FFP2 எனப்படுகின்ற அந்த வகை மாஸ்க்குகள் சாதாரணமானவற்றை விட அதிக பாதுகாப்பு அளிக்கக் கூடியவை என்று கருதப்படுகிறது. ஒமெக்ரோன் தொற்றைத் தவிர்ப்பதற்கு FFP2 மாஸ்க் சிறந்ததா என்பதை அறிவதற்காக அரசுநாட்டின் பொதுச் சுகாதார அதிகார சபையின் (Haut Conseil de santé publique) முடிவுக்காகக் காத்திருக்கிறது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

🔴வில்ப்பன் சிறையில் பெரும் தொற்று

பாரிஸ் பிராந்தியத்தின் வில்ப்பனில்அமைந்துள்ள சிறைச் சாலையில் (La maison d’arrêt de Villepinte – Seine-Saint-Denis)தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 800 கைதிகளில் 200 பேரை ஒமெக்ரோன்வைரஸ் பெரும் கொத்தாகப் பீடித்திருக்கிறது. 179 கைதிகளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களோடு தொடர்புடைய கைதிகளும் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைதிகளைப் பார்வையிடுவதற்காக வெளி ஆட்கள்செல்வதை சிறை நிர்வாகம் தடைசெய்துள்ளது. பிரான்ஸின் சிறைகளில் இதுவரை கைதிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கலாக மொத்தம் 27 ஆயிரத்து 370 பேர் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர்.-

குமாரதாஸன். பாரிஸ்.