நிர்வாகத்திறமை உங்கள் பக்கம் தான் | மிதுனம் பொதுப்பலன்கள்

மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ஜென்ம ராசி எதுவென்று தெரியாத ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், கா, கி, கு, க, ங, ச்சா, கே, கோ, ஹ… ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசியின் அதிபதி: புதன், நட்சத்திர அதிபதிகள்: செவ்வாய், ராகு, குரு. பாதகாதிபதி: குரு. மாரகாதிபதி: செவ்வாய், குரு.


கல்விக்கு அதிபதியான புத பகவானின் ஆதிக்கத்தில் பிறந்து, ஆற்றல் மிக்கவர்களாகவும், புத்தி சாதுர்யமும் நிர்வாகத் திறமையும் சாதுரியமாக செயல்படும் ஆற்றலும் எதையும் சாதித்துக் கொள்ளும் சக்தியும் படைத்த மிதுன ராசி நண்பர்களே!

மற்றவரை உற்சாகப்படுத்தி அவர்கள் வெற்றி அடைவதற்கு வழி காட்டுவதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள், உங்கள் சிந்தனையும் மேலோங்கியதாகவே இருக்கும், உங்கள் செயல்களும் வெற்றிக்குரியதாவே இருக்கும், யான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டும் என்று எண்ணக் கூடியவர்களாக, பொது நலனில் நாட்டம் உடையவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.

எந்த ஒன்றிலும் நிரந்தரமான ஈடுபாடு என்பது உங்களிடம் இருக்காது, உங்களைப்பற்றி மற்றவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது, உங்களுக்கு ஒரு விஷயத்தில் பிடிப்பு ஏற்பட்டு விட்டால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள், அதில் முழுமையாக இறங்கி வெற்றியை அடைந்து விடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையும், பரிபூரணமான சிந்தனையும் உங்களை வெற்றியாளராக்கி விடும்.

எல்லோரும் உயர்வை அடையவும், தாழ்ந்து கிடப்பவரை உயர்த்தவும் உங்களால் மட்டுமே முடியும். எழுத்து, பேச்சு சிந்தனை எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதிலும் சிறந்து விளங்குவீர்கள். இலக்கியத் துறையிலும் நீங்கள் மிகச் சிறப்பான இடத்தை வகிப்பீர்கள். மகிழ்ச்சியான செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்கும். என்றாலும், சந்தேகப்படுவதும் சஞ்சலப்படுவதும் உங்களின் பலவீனம் என்றே சொல்ல வேண்டும்.

உங்களுக்கு ஞாபக சக்தி அதிக அளவில் இருக்கும். அது வேண்டாத விஷயங்களையும் உங்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கும். என்பதால் உங்கள் செயல்களை அது முடக்குவதாகவே இருக்கும்.

உங்களிடம் பழகுபவர்களை எடை போடுவதில் நீங்கள் கெட்டிக்காரராக இருப்பீர்கள். எதையும் யூகிப்பதில் நீங்கள் திறமைசாலியாக இருப்பீர்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தாமலேயே மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை கிரகிக்கும் ஆற்றல் பெற்றவர் நீங்கள். மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட் என்பது உங்களுக்குத்தான் பொருந்தும் எல்லாவற்றிலும் ஈடுபாடு காட்டுவீர்கள், அதில் வெற்றியும் பெறுவீர்கள். சமத்துவம் சகோதரத்துவம் என்பதே உங்கள் கொள்கையாக இருக்கும், மற்றவரின் குற்றம் குறைகளையும் பலவீனத்தையும் தெரிந்து கொள்ளும் நீங்கள் மற்றவர் செய்யும் சிறு தவறையும் பெரிய குற்றமாகவே நினைப்பீர்கள்.

துயரம், துக்கம் என்பதெல்லாம் உங்களால் தாங்க முடியாத ஒன்று, அதேபோல் கடினமான உழைப்பிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் செயல்களை சுலபமாக்கி சாதகமாக்கிக் கொள்வீர்கள். உங்களுக்கு ஒரு நிலையான இடத்தில் அமர்ந்து கடினமான வேலைகளை உடல் உழைப்பின் மூலமாக செய்தல் பிடிக்காது என்றாலும் மூளை சம்பந்தப்பட்ட அறிவு நுட்பமான வேலைகளை இருந்த இடத்திலிருந்தே திறமையுடன் செய்து முடிப்பீர்கள். வாக்கு சாதுரியம், மூளை உழைப்பு இவை இரண்டையும் நம்பியே நீங்கள் தொழிலைச் செய்வீர்கள். உளவுத் துறையில் பணியாற்ற மிகவும் பொருத்தமானவராக நீங்கள் இருப்பீர்கள். வேவு பார்த்தல், பிறர் செய்யும் குற்றங்களைக் கண்டு பிடித்து வெளிப்படுத்துதல், சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவராக இருத்தல் என உங்கள் பணி சிறப்படையும். உங்கள் செயலில் மற்றவர்கள் தலையிடுவதை நீங்கள் எப்போதும் விரும்ப மாட்டீர்கள். அப்படியொரு தலையீடு நடந்தால் அந்தச் செயலை அதற்கு மேல் தொடரவே மாட்டீர்கள்.

பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால் நேரம் கிடைக்கும் போது ஓய்வு எடுத்துக் கொள்வது உங்கள் உடல் நலனுக்கு நல்லது. உலகத்திலுள்ள எல்லாமும் உங்களுக்குத் தெரியும் என்ற நினைப்பு உங்கள் மனதில் இருக்கும் என்றாலும் எதையும் முழுமையாக நீங்கள் தெரிந்திருக்க மாட்டீர்கள். ஆனால், உங்களுக்குத் தேவையானவற்றை மிகத் தெளிவாக உணர்ந்து இருப்பீர்கள். ஆலோசனைகள் சொல்வதில் கெட்டிக்காரரான நீங்கள் தைரியத்தில் குறைவானவர் என்றே சொல்லவேண்டும். ஒரு சில கெட்டப் பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகவும் வாய்ப்புண்டு. உங்களில் பலர் கடன் வாங்குவதற்கு அஞ்சுவீர்கள். அப்படியே வாங்கினாலும் அதைக் கொடுத்துவிட முயல்வீர்கள். உங்களுக்கு சுய சிந்தனைதான் மூலதனம் என்பதால் அதைக் கொண்டு சொந்த வியாபாரம் செய்தால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு லாபம் கொழிக்கும், பொருள் வளம் அதிகரிக்கும்.

எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் எண்ணம் உலகிற்கும், மக்கள் வாழ்விற்கும் ஏற்றவாறு இருக்கும். அது, உங்கள் திறமைகளை மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வைக்கும். உங்கள் திறமையால் நீங்கள் நினைத்ததைச் சாதிப்பவர்களாக இருப்பீர்கள். உங்கள் மனமும் உங்கள் கனவும் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்தும். பழமைகளை நீங்கள் வெறுப்பவராக இருந்தாலும் பழமையை புதிய காலத்திற்கு ஏற்ப மாற்றக்கூடிய, மெருகேற்றக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டாகும். உங்களுடைய முயற்சிகள் எடுத்த எடுப்பிலேயே வெற்றி அடையாது என்பதால் மனம் தளர வேண்டாம். தொடர் முயற்சியால் நீங்கள் நினைத்த அளவிற்கு வெற்றி பெற்று உங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் உங்கள் வாழ்வில் நிறைவேறும்.

இவையெல்லாம் மிதுன ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப் பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் கோட்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.

எழுதுவது : சோதிடவித்தகர் பரணிதரன்