உலகின் மிகப் பெரிய “அன்ரனோவ்” ரஷ்யாவின் தாக்குதலில் அழிந்தது!

மிரியா என்கின்ற(Mriya) உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் அழிந்துவிட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கிறது.

உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில்இணைந்திருந்த காலத்தில்1980களில்அங்குள்ள விமானக் கட்டுமானத் தொழிற்சாலையில் மிரியா என்கின்ற அன்ரனோவ் (Antonov An-225) வடிவமைக்கப்பட்டது.விண்வெளி ரொக்கெட்டுகளையும் சாதனங்களையும் இடத்துக்கிடம் எடுத்துச் செல்லும் தேவைக்காகவேசோவியத் யூனியன் அதனை அன்று தயாரித்திருந்தது. அண்மையில் கொரோனா பெருந் தொற்றின்போது மருத்துவப் பொருள்களை உலகெங்கும் கொண்டு செல்லும் பணியில் மிரியா ஈடுபடுத்தப்பட்டது.

அது ஒரே தடவையில் 650 தொன் பொருள்களைச் சுமந்து பறக்க வல்லது. அதுவே உலகில் ஒரேயொரு ராட்சசரக்கு விமானம் என்ற பெருமையை இதுநாள் வரை கொண்டிருந்தது. அதுதரித்து நிற்கும் இடம் உக்ரைனின் கீவ் அருகே உள்ள ஹொஸ்டோமெல் விமான நிலையம் (Hostomel Airport). ரஷ்யப் படைகள் இரு தினங்களுக்கு முன்னர் அந்த வான் தளத்தைக் கைப்பற்றிய சண்டையின் போது மிரியா அழிக்கப்பட்டது என்பதை உக்ரைன் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் விமான சேவையின் பெருமைக்குரிய அடையாளமாக விளங்கிவந்த மிரியா எரிந்து அழிந்ததை அந்நிறுவனம் அதன் ருவீற்றரில் வருத்தத்துடன் பதிவுசெய்துள்ளது.

“ரஷ்யா எங்கள் மிரியாவை அழித்திருக்கலாம். ஆனால் ஐரோப்பாவில் உறுதியான சுதந்திர ஜனநாயக தேசம் என்றஎங்கள் கனவை ஒருபோதும் சிதைத்துவிட முடியாது. எங்கள் மிரியாவை நாங்கள் மீளக் கட்டுவோம் “என்று உக்ரைன்பாதுகாப்பு அமைச்சின் ருவிட்டர் பதிவு ஒன்றில் வெளியான அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

– -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.