அல்ப்ஸ் மலைத்தொடரிலிருக்கும் சகல பனிச்சறுக்கு மையங்களும் மூடப்பட்டன.
இக்கோடையில் ஐரோப்பிய நாடுகள் பலவும் எதிர்கொண்டு தவிக்கும் வெப்ப அலையின் விளைவு கோடைகாலப் பனிச்சறுக்கு மையங்களை மூடவைத்திருக்கின்றது. அல்ப்ஸ் மலைத்தொடரில் இருக்கும் பிரபல கோடைகாலப் பனிச்சறுக்கு விளையாட்டு மையங்களெல்லாம் மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வழக்கமாகக் கோடையிலும் தாராளமாகப் பனி கொட்டிக்கிடக்கும் பிரான்ஸ், சுவிஸ், இத்தாலி நாடுகளின் அல்ப்ஸ் மலையின் உயரமான பகுதிகள் அனைத்திலும் வெப்பநிலை அதிகமாகிக் காற்றில் நீர்ச்செறிவு அதிகமாகியிருக்கிறது. எனவே அப்பனிமலைகளில் மிகக்குறைவான பனிச்செறிவே மிச்சமிருக்கிறது. 3,000 மீற்றர் உயரமான சிகரங்களிலேயே வெப்ப நிலை சுமார் 11 பாகை செல்சியஸ் ஆக இருக்கிறது. அதனால், அங்கே பனிமலைகள் உடைந்து ஆபத்து ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் அல்ப்ஸ் மலையின் பகுதிகளிலேயே தமது கோடைகாலப் பயிற்சிகளுக்காகப் போவது வழக்கம். அவர்களுடைய பயிற்சிக்கும் இந்தக் கோடைகாலம் தடை போட்டிருக்கிறது. ஐரோப்பாவில் தற்போதைய நிலைமையில் நெதர்லாந்திலிருக்கும் லாண்ட்கிராப் [Landgraaf] என்ற செயற்கையான பனிச்சறுக்கு விளையாட்டு மையம் மட்டுமே மிச்சமாகியிருக்கிறது. அதீதமான மின்சாரப் பாவனையுடன் இயக்கப்படும் பனிச்சறுக்கு மையம் அதுவாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்