நேதாஜி ஒரு சகாப்தம்…!

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

நேதாஜி ஒரு
சகாப்தம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

உன் தாயின் கருவறையில்
நீ ஒன்பதாவது குழந்தையாம்…
உன்னை வடிக்க
எட்டு குழந்தைகளிடம்
ஒத்திகைப் பார்த்திருக்கிறது
உன் தாயின் கருவறை…..
அதனால் தான்
நீ இவ்வளவு
வலிமைமிக்கவனாக
பிறந்திருக்கிறாய்…!!!

கல்கத்தா பல்கலைக்கழகத்தில்
“அறிவுப்பால்” பருகுதலில்
இரண்டாவது
இடம் பிடித்தாலும்…..
உன் மனம் என்னவோ
“ஞானப்பாலுக்கே”
ஏங்கித் தவித்தது…..!!

ஞானப்பால் பருகிட
“விவேகானந்தரின்
மடியில் சேயாக விழுந்தாய்…”
ஞானப்பால் பருகியவுடன்
சாதாரண மனிதனாக
இருந்த நீ !
“அசாதாரணமான
மனிதனாக எழுந்தாய்….!! “

வேர் விட்டு
விருட்சமாக
நீ வளர்ந்த போது….
உனது கிளைகள்
தேசத்தின் நலம்
நோக்கியே நீண்டது….

அதை வெட்டும் நோக்கில்
லண்டன் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்திற்கு
கல்வி கற்பதற்காக
அனுப்பினார் உன் தந்தை…

அங்கும் வென்று
பதவிவெற்றி மாலை பெற்றாய்….
இருப்பினும்….
தன்னாட்டு மக்களை
அடிமைப்படுத்தி
வைத்திருக்கும் கரங்களால்
பெற்ற பதவிமாலையால்
நமக்கு என்ன பெருமை? என்று
கழற்றி வீசி எறிந்தாய்….

சுதந்திரம் வேண்டும் என்று
அண்ணல் காந்தியின்
அறப்போராட்டங்களில்
உனது குரல்
சிங்கமாய் கர்ஜித்தது….
உனது
சிங்க கர்ஜனையைக் கண்ட
வெள்ளையர்கள்
உன்னை
வெளியில் விடவே! பயந்து
அவ்வப்போது
உன்னைக் கூண்டுக்குள்
சிறை வைத்தனர்….
சிறையில் இருந்தாலும்
சிங்கத்தின் சீற்றம்
குறைந்து விடுமா என்ன?

ஒரு கன்னத்தில்
அறைந்தால்
மறுக்கன்னத்தையும்
காட்டு என்பது
காந்தியின் கொள்கை….
ஒரு கன்னத்தில்
அறைந்தால்
அறைந்தவனின்
இரு கன்னத்திலும்
அறை என்பது
உனது கொள்கை…..

சுதந்திரத்திற்காக
காந்தி
வலிமையான
வெள்ளையர்களை எதிர்த்தார்…
ஆனால்
நீயோ !
அவர்களிலும் வலிமையான
காந்தியையே எதிர்த்தாய்….
ஆயிரம் ஆயிரம்
சிங்கங்களும்
உன் வலிமைக்கு ஈடாகுமா?

பதுங்கினால் மட்டுமே
ஆங்கில ஓநாய்களை
வேட்டையாட முடியும் என்று
தீவிரமான
யோசனைக்குப் பிறகு
தீர்க்கமான முடிவு எடுத்தாய்….

பதுங்குவதற்கு
அன்னை நாட்டை விட
அண்டை நாடே !
சிறந்தது என்று
உன் சிந்தனை சொல்லியது….
மாறுவேடத்தில்
காற்றாய் புறப்பட்ட நீ !
ஜப்பானில்
புயலாய்
மையம் கொண்டாய்….!!

அங்கிருந்தே
வானொலி வழியாக
விடுதலை
உணர்வு குருதியை
இந்தியர்களுக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தாய்….

குற்றுயிராய்
கொலையுயிராய் கிடந்த
இந்திய தேசிய ராணுவத்திற்கு
புத்துயிர் கொடுக்க
போதிய இரத்தம்
உன்னிடம் இல்லாததால்….

“உங்கள் ரத்தத்தை
கொடுங்கள்
இந்தியாவிற்கு
சுதந்திரம் பெற்று
தருகிறேன் ” என்று
உரக்கச் சொன்னாய்…
வ உ சியோ ரத்தம் என்ன
ரத்தம் நிறைந்த
600 இளைஞர்களை
உனக்கு கொடுத்தார்….!

ஒரு வழியாக
இந்திய தேசிய ராணுவம்
உயிர்பெற்று எழுந்தது….
அதற்கு
தேசிய கொடியை உடுத்தி…
ஜன கண மன கவிதையை
தேசிய பாடலாக
அறிமுகப்படுத்தி….
கம்பத்தின் உயரத்தில்
நிறுத்தி
நீயே தலைமை தாங்கி
நடத்தினாய்…….!!

இந்திய தேசிய
ராணுவப்படையை
இந்தியாவின்
எல்லை வரை
வெற்றிகரமாக
வழி நடத்தி வந்து விட்டாய்….
எல்லையில்
வெள்ளையர்களின்
பீரங்கிக்கு முன்னால் தான்
உன்னுடைய
கை துப்பாக்கி
எதுவும்
செய்ய முடியாமல் போய்விட்டது… ஆயினும்….
உனது வீரம்
வெள்ளையர்களின்
உள்ளாடையை
ஈரப்படுத்தியது…. !!

சுதந்திரம் பெற்றதற்கு
காந்தியின் அறவழியா?
உன் போர்வழியா என்று
பட்டிமன்றம் வைத்தாலும்
எந்த நடுவராலும்
தீர்ப்பு சொல்ல முடியாத….

சுதந்திர கொடி காந்தியின்
அறவழி என்றால்…..
அது பறக்கக் காரணமான
கம்பம் கயிறு
உனது போர்வழி என்பதை
யாராலும்
மறுக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது….

“ஜெய்ஹிந்த்” என்று சொல்லும்போதெல்லாம்
எங்களில்
எழுந்து நிற்பது
தேசிய உணர்வு மட்டுமல்ல….
நேதாஜி என்று
அழைக்கப்படும் நீயும் தான்…..!! வாழ்க உனது வீரம் ! வளர் உனது புகழ்! *கவிதை ரசிகன் குமரேசன்*

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *