தடுப்பூசியைப் பரந்துபட்ட அளவில் கட்டாயமாக்குவதற்கு அரசு முஸ்தீபு நாடாளுமன்றம் ஊடாக ஆலோசனை.

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள், நோயாளரைப் பராமரிப்பவர்கள்(les soignants) போன்றோருக்கு மாத்திரம் அன்றிப் பரந்துபட்ட அளவில் ஏனைய தொழில் பிரிவினருக்கும் தடுப்பூசியைக்கட்டாயமாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவப் பணியாளர்கள் குறிப்பாக மூதாளர்கள், நோயாளிகள் போன்றவர்களைப் பராமரிக்கின்ற பணிகளில் ஈடுபடுவோர் தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்பதைச் சட்டத்தின் மூலம் கட்டாயமாக்குவது குறித்து பிரதமர் ஜீன் காஸ்ரோ நாடாளுமன்றத்தின் கட்சிக் குழுக்களுடனும் தொழில் சங்கங்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார் என்று பாரிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதலில் நோயாளர் பராமரிப்பாளர்களுக்கும் (les soignants) பின்னர் ஏனைய துறையினருக்கும் அதனை விரிவுபடுத்தும் சட்ட வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.

நாடு நான்காவது கட்டப் பொது முடக்கம் ஒன்றைச் சந்திப்பதைத் தவிர்க்கவேண்டுமானால் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படவேண்டும் என்று தொற்றுநோயியலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நாட்டின் சனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரே இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். நாட்டு மக்களில் அரைவாசிப் பங்கினர் இன்னமும் ஓர் ஊசியைக் கூடப் போட்டுக் கொள்ளவில்லை.

சாதாரண மக்கள் தடுப்பூசி ஏற்றப் பின்னடித்து வருகின்றனர். அதேநேரம் மூதாளர் இல்லங்களில் வயோதிபர்களையும் நோயுற்றவர்களையும் பராமரிக்கின்ற பணியாளர்களில் கணிசமானோரும் கூட இன்னமும் தடுப்பூசி ஏற்றாமல்உள்ளனர்.

இந்த நிலையில் இனிவரும் காலங்களில் மீண்டும் சுகாதாரக் கட்டுப்பாடுகளை வகுக்கவேண்டி வந்தால் அவற்றைத் தடுப்பூசி ஏற்றியவர்கள், ஏற்றாதவர்கள் என்ற இரண்டு பிரிவினருக்கும் தனித் தனியாக வரையறை செய்ய வேண்டி இருக்கும் என்று அரசு எண்ணுகிறது. இதனால் சமூக மட்டத்தில் பிரிவுகள், பாகுபாட்டு உணர்வுகள் ஏற்படக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த தொற்றலை ஒன்றைத் தவிர்க்கவும், சமமாக அனைவருமே தடுப்பூசிஏற்றிக்கொள்வதை விரைவு படுத்தவும்சட்ட ரீதியான வழி முறைகளை நாடவேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஜரோப்பாவில் டெல்ரா எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு வரும் குளிர் காலப்பகுதியில் பெரும் தொற்றலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் கோடை விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைத் தொடக்க காலப்பகுதியில் தொற்றுக்கள் அதிகரித்து மீண்டும் மருத்துவமனை அனுமதிகளால் அழுத்தங்கள் உருவாகலாம் என்று நிபுணர்கள் எதிர்வு கூறி உள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *