அடையாளம் தெரியாத மிலான் நகரப் பெண்ணொருத்தியின் தோல் பகுதியொன்று கொவிட் 19 இன் மூலம் பற்றிய விபரங்களைக் கொண்டிருக்கிறதா?

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 இன் மூலம் எது போன்ற விபரங்களை அறியும் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. அவர்களின் கவனம் சமீபத்தில் இத்தாலியின் மிலான் நகரிலிருக்கும் தோல் பகுதியொன்றின் மீது விழுந்திருப்பதாகத் தெரியவருகிறது. ஒரு நாணயம் அளவான அந்தத் தோல் பகுதி அடையாளம் தெரியாத 25 வயதான ஒரு இத்தாலியப் பெண்ணுக்குச் சொந்தமானதாகும்.

மிலான் மருத்துவசாலையில் சேகரிக்கப்பட்ட அத்தோல் துண்டு 2019 ம் ஆண்டு நவம்பரில் அங்கே தொண்டை நோவு, தோல் வியாதி போன்றவைக்காக வந்திருந்த நோயாளியிடம் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அந்த நோயடையாளங்கள் சாதாரணமாகக் கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டவர்களுக்கு உண்டாபவையாகும். 

தோல் வியாதிகள் பற்றிய பிரிட்டிஷ் ஆராய்ச்சிச் சஞ்சிகையொன்றில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றில் அந்தப் பெண்ணிடம் எடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வரும் தோல் பகுதி ஆறு மாதங்களுக்குப் பின்னர் பரிசீலிக்கப்பட்டபோது அதில் கொவிட் 19 ஐ உண்டாக்கும் SARS-CoV-2 கிருமிகள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

டிசம்பர் 2020 இல் வுஹான், சீனாவில் பரவ ஆரம்பித்த கொவிட் 19 உண்மையிலேயே அதன் முன்னரே பரவ ஆரம்பித்திருக்கலாம், ஆனால், அது கவனிக்கப்படாமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தொன்று ஆராய்ச்சியாளர்கள் சிலரால் குறிப்பிடப்பட்டு வருகிறது. அது உண்மையாக இருக்கலாம் என்பதை அந்த மிலான் பெண்ணின் தோல் பகுதி நிரூபிக்கக்கூடுமென்ற எண்ணம் எழுந்திருக்கிறது. ஆனால், அதன் உரிமையாளர் எவரென்று அறியாத காரணத்தால் மேற்கொண்டு அந்தப் பெண்ணின் தொடர்புகள் பற்றிய விபரங்களை ஆராயமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

உலக மக்கள் ஆராய்ச்சி அமைப்பின், நெதர்லாந்தைச் சேர்ந்த கிருமிகள் ஆராய்ச்சியாளரான மாரியன் கூப்மான்ஸ் அந்தத் தோல் பகுதி காட்டும் விடயங்களை உதாசீனம் செய்யலாகாது என்கிறார். அதைப் பற்றி மேலும் ஆராய உலகின் இரத்த வங்கிகளில் கொவிட் 19 எதிரணுக்கள் கொண்ட 2019 இல் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் இருக்கின்றனவா என்று தேடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *