ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல் ஒன்ராறியோவில் கூரைகள் சிதறின! பலருக்குக் காயம்! 25 வீடுகள் சேதம்!!

குறுகிய நேரத்தில் கொடூரமாகத் தாக்கும் ரொனாடோ என்ற சூறாவளி காரணமாக கனடாவின் ஒன்ராறியோவில் வீடுகள்பலவற்றின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன.அங்குள்ள பார்ரி (Barrie) என்னும் பகுதியில் வியாழன் பிற்பகல்இந்த இயற்கை அனர்த்தம் நேர்ந்தது.

வீடுகள் கூரையிழந்தும், பகுதிகளாகப் பிரிந்தும் கிடக்கின்ற காட்சிகளைப் பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். சிறிய யுத்தப் பிரதேசம் போன்று அந்தப் பகுதி காட்சியளிக்கிறது. நான்குவீடுகள் முற்றாகத் தரைமட்டமாகின. காயமடைந்த எண்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கார்கள் பல சேதமாகின. மரங்களும் அழிவுண்டன.சேதங்களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்.

நாட்டின் சுற்றுச் சூழல் திணைக்களம் (Environment Canada) ரொனாடோ(tornado) புயல் எச்சரிக்கையை விடுத்த சிறிது நேரத்தில் சுழல் புயல் சுமார் பத்து, 15 நிமிடங்கள் மாத்திரமே அந்தப் பிரதேசங்களைத் தாக்கி நகர்ந்தது.

இந்த இயற்கைச் சீற்றத்தால் ஒன்ராறியோவில் வசிக்கின்ற தமிழர்கள் எவராவது பாதிக்கப்பட்டனர் என்ற தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

கடந்த 1985 ஆம் ஆண்டின் பின்னர் பார்ரி(Barrie) பகுதியில் ஏற்பட்ட மோசமான புயல் தாக்கம் இது என்று அங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர். வீடுகளில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தமை ஆச்சரியம், அதிர்ஷ்டம் என்று அப்பகுதி மேயர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பல நாட்களாக நீடித்த வெப்ப அனல் அனர்த்தத்தை தொடர்ந்து இந்த சூறாவளித் தாக்குதல் நடந்திருக்கிறது

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *