பிரான்ஸில் கத்தோலிக்க மதகுரு றுவாண்டா அகதியால் கொலை!

தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய றுவாண்டா நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் 60 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரை அடித்துக் கொலை செய்த பின்னர் பொலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.

பிரான்ஸின் மேற்குக் கரையோர மாவட்டமாகிய Vendée பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் மதகுருவே கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நாட்டின் கத்தோலிக்க சமூகத்தினரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மதகுருவின் சடலம் அவரது தேவாலயதங்குமிடத்தில் அடி காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறது. சந்தேகத்துக்குரிய றுவாண்டா பிரஜை பொலீஸ் நிலையம் ஒன்றில் இன்று காலை சரணடைந்தார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

Nantes நகரில் உள்ள தொன்மை வாய்ந்த கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்று கடந்த ஆண்டு ஜூலையில் மர்மமான முறையில் எரிந்து அழிந்தமை தெரிந்ததே.தேவாலயத்துக்குத் தீ மூட்டியவர் எனச்சந்தேகிக்கப்பட்டு அங்கு காவலராகப் பணிபுரிந்து வந்த 40 வயதான றுவாண்டா நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். விசாரணையின் பின்னர் நீதிமன்றக் காவலில் விடுவிக்கப்பட்டிருந்தஅந்த நபரே கத்தோலிக்க மதகுருவைக் கொன்றுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மதகுருவின் படுகொலையில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொலையாளியின் மனநிலைப் பாதிப்பே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் மனநல சிகிச்சைப்பிரிவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் விடுவிக்கப்பட்டிருந்த அவருக்கு கொலையுண்ட மதகுரு தனது தேவாலயத்தில் அடைக்கலம் வழங்கி இருந்தார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே மோசமான குற்றச் செயல் ஒன்றைப் புரிந்த வெளிநாட்டவர் ஒருவர் நீதிமன்றக் காவலில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொலைக்குற்றம் ஒன்றைப் புரிந்தமை பொலீஸ் மற்றும் உள்துறை அமைச்சுக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தி உள்ளது.

தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவியானமரீன் லூ பென், மதகுருவின் கொலைகுறித்துக் காரசாரமாக அரசை விமர்சித்துள்ளார். குற்றம் புரிந்த நபரை அவரதுநாட்டுக்குத் திருப்பி அனுப்பாமல் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடித் திரிய அரசு அனுமதித்தமைக்காக அவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணைகள் முடிவடையாதநிலையில் – நீதிமன்றக் காவலில் விடுவிக்கப்பட்டிருக்கும்- ஒருவரை உடனடியாக நாடுகடத்திவிட முடியாது என்றுஎதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உள்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *