அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் அதிகாரம் பைசர்-பயோன்டெக் தடுப்பு மருந்தைப் பாவனைக்கு அனுமதித்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் “அவசர தேவைக்காகப் பாவிக்க” அமெரிக்காவில் அனுமதிபெற்ற கொவிட் 19 தடுப்பு மருந்தைத் திங்களன்று அமெரிக்கா “சாதாரண காலத்தில்” அதே தொற்றுநோய்த் தடுப்புக்காகப் பாவிக்கும் அனுமதியைக் கொடுத்தது. பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பாவிப்பதற்காக அந்த மருந்தை அமெரிக்காவில் மருந்துகளைப் பாவனைக்கு அனுமதிக்கும் திணைக்களமான FDA அங்கீகரித்திருக்கிறது.
ஹொப்கின் பல்கலைக்கழகப் புள்ளிவிபரங்களின்படி உலகில் கொவிட் 19 ஆல் அதி மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாகும். சுமார் 38 மில்லியன் அமெரிக்கர்களைத் தொற்றிய அப்பெருவியாது 628,000 அமெரிக்கர்களின் உயிரை இதுவரை குடித்திருக்கிறது. தடுப்பு மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்திலிருந்ததை விடக் குறைவான அளவிலேயே அதைப் போட்டுக்கொள்ள அமெரிக்கர்கள் தற்போது ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால் திங்களன்று இரவு ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் தனது நாட்டு மக்களிடம் அதைப் போட்டுக்கொண்டு பரவலைக் கட்டுப்படுத்த உதவும்படி அறைகூவல் விடுத்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்