உப – ஜனாதிபதியாகக் களத்தில் குதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மகள்.

ஜனாதிபதித் தேர்தல் பிலிப்பைன்ஸில் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே கட்டியம் கூறப்பட்டு வந்த ஒரு விடயம் ஒரு பங்கு உண்மையாகியிருக்கிறது. ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களாகக் குதித்திருக்கும் பிரபலங்களிடையே சாரா டுவார்ட்டே காப்ரியோ, முன்னாள் சர்வாதிகாரி மார்க்கோஸின் மகன் ஆதரவுடன் உப – ஜனாதிபதி வேட்பாளராகிறார்.

நாட்டில் கணிசமாகப் பரவியிருந்த போதைப்பொருட்களின் விற்பனையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறிப் பதவிக்கு வந்த டுவார்ட்டே சட்ட ஒழுங்குகளுக்குக் கட்டுப்படாமல் அவ்விற்பனையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றொழித்தார். ஆயினும் அவருக்கு நாட்டில் தொடர்ந்தும் கணிசமான ஆதரவு இருக்கிறது. அதேபோலவே சாரா காப்ரியோவை ஜனாதிபதியாகக் காண விரும்புகிறவர்கள் பலர்.

நாட்டில் பெரும் பலமுள்ள அரசியல்வாதிகள் குடும்பத்தினர் இருவர் கைகோர்த்துக்கொண்டு மீண்டும் தலைமையைக் கைப்பற்றுவது மனித உரிமைகளுக்கெதிரான குற்றங்களை மேலும் அதிகரிக்க வைக்கும் என்று அதற்காகக் குரல்கொடுப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்