சிறைத்தண்டனை பெற்ற முன்னாள் பிரதமரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பும்படி போராடும் ஆதரவாளர்கள்.

பங்களாதேஷின் பிரதமர் ஷெய்க்கா ஹஸீனாவின் அரசியல் எதிரி காலிதா ஸியா. 2001 – 2006 காலத்தில் பிரதமர் பதவியிலிருக்கும்போது ஸியா செய்த லஞ்ச, ஊழல்களுக்காக 2018 இல் சிறைத்தண்டனை பெற்றார். 76 வயதான அவர் வியாதிகளால் வாடுவதால் சிறையிலிருக்கத் தேவையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் ஸியாவின் நோய் மோசமாகியிருப்பதால் அவருக்குப் பிரத்தியேக மருத்துவ உதவி தேவை என்றும் அதற்காக அவரை வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

“என்னிடமிருக்கும் அதிகாரத்தை வைத்து அவரை வீட்டிலிருக்கக் கூடியதாகச் செய்திருக்கிறேன். ஆனால், வெளி 

நாட்டுக்குச் செல்ல அனுமதிக்க முடியாது,” என்கிறார் பிரதமர் ஹஸீனா.

ஸியாவின் ஆதரவாளர்கள் சமீப வாரங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்களை நடாத்தித் தமது தலைவியை வெளிநாட்டுக்குச் சிகிச்சை பெற அனுமதிக்கும்படி கோரிவருகிறார்கள். அக்கூட்டங்களைக் கலைக்கச் சென்ற பொலீசார் தாக்கப்பட்டதால் போராட்டக்காரர் மீது நீரைப் பீய்ச்சியடைத்துக் கலைத்து வருகிறார்கள். அதனால் சுமார் 20 பேர் காயப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்