வின்கொன்ஸின் மாநிலத்தில் நத்தார் ஊர்வலமொன்றினூடே ஒருவன் வாகனத்தை ஓட்டியதில் பலர் இறப்பு.

வௌகேஷா (Waukesha) நகரில் ஞாயிறு மாலையில் நடந்துகொண்டிருந்த மகிழ்ச்சியான நிகழ்வு படு துயரமாக மாறியது. நத்தார் ஊர்வலம் ஒன்றின் ஊடாக வாகனத்தை ஓட்டியதில் பலர் அடிபட்டு இறந்ததுடன், 20 க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். ஊர்வலத்தில் பல சிறாரும் பங்குபற்றியிருந்ததால் அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பதினோர் வயதுவந்தவர்களும் 12 பிள்ளைகளும் வின்கொன்ஸின் மருத்துவசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் உறவினர்களுக்கு அறிமுகப்படுத்திய பின்னரே இறந்தவர்கள் தொகை வெளியே தெரிவிக்கப்படும்.

“சுமார் 20 பேருக்குக் குறையாமல் வாகனத்தால் மோதப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிறு வயதினரும் அடக்கம். வாகன ஓட்டியை நிறுத்துமுகமாக பொலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். ஆனால், அதனால் அங்கிருந்த எவரும் காயப்படவில்லை,” என்று நகரின் பொலீஸ் அதிபர் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருக்கிறார்.

 சிகப்பு நிற SUV ரக வாகனமொன்றே ஊர்வலத்தின் ஊடாக மோதித்தாக்குவதற்குப் பாவிக்கப்பட்டிருக்கிறது. சந்தேகத்துக்குரிய ஒரு வாகனம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்