தமிழோடு வாழ்வோம்!

தமிழ் எழுத்தே
எங்கள் தலை
எழுத்து.
எழில் மேனியே
கவிதைகளுக்கும்
காவியங்களுக்கும்
நீ… தான்
கலைவாணியோ!

தமிழை
மறந்து போன
தனயர்களை
தமிழ் அருவிகளில்
குளிக்க வைத்து
அரங்கேற்றம்
நடத்துவோம்!

மன காடுகளில்
தமிழை தொலைத்து
பட்ட மரமாகிவிட்ட
தமிழர்களுக்காக
வான்நதியே… …
அந்த பட்ட மரத்தில்
மறுபடியும்
பாரிஜாதம் மலரட்டும்!

பிறக்கின்ற
தமிழ் பிள்ளை களின்
நாக்குகளில்
தேனை தடவும் போது
தமிழின்
இனிமையையும்
தடவுங்கள்.

அன்னைமாரே
உங்கள்
அழகு பிள்ளைகளுக்கு
தாய் பால் ஊட்டும்
போது
தமிழ் பாலையும்
சேர்த்து ஊட்டுங்கள்
தமிழன் வளருவான் .
தமிழும் தளிரும்
சேர்ந்து வளரட்டும்!

அம்மா என்று
அழும்
குளவிக்கு தெரிகிறது
அழகு தமிழ்
அமிர்தமென்று.
வளர்க்கும் தமிழர்க்கு
தெரியவில்லை.
தமிழின் அருமைகளும்
பெருமைகளும்!

அகரத்தை
புகட்டாமல் இருந்தால்
சிகரத்தை
தொடமாட்டார்கள்
காலம் காலமாக
தவழ்ந்து வந்த
தாய்மொழி …
காட்சி படுத்தி
பார்த்தால்… நம்
கன்னிதமிழோ…
அநாதையாய் …

அழகு தமிழாம்
அம்மா.
மம்மி என்று
அறியா பிஞ்சுகளின்
நெஞ்சுகளில்
பசுமரத்தாணிபோல
பதிந்து கிடக்கிறது.
என் அன்னை தமிழோ
கூனி குறுகி கிடக்கிறது!

அப்பாக்கள்
டாடிகள்.
என் தாய் மொழி யின்
முடி கிரீடத்தை
முட்டிதள்ளிவிட்டு
முள்கிரீடத்தால்
முடிசூட்டி கொள்கின்றனர்!

இடிந்து நிற்கும்
என் அன்னைக்கு தோள்கொடுப்போம்
என் அன்னைதமிழுக்கு
கலைகோயிலை
கட்டிமுடிப்போம்…!
முகர்ந்து
முன்னேறும்
தமிழுக்கு
முச்சங்கம்
அமைப்போம் .
தமிழோடு
தமிழாக வாழ
ஒளி விளக்கை
ஏற்றி வைத்து
அக இருட்டை துரத்துவோம்!

எழுதுவது : மதுபிரியா.