இப்படியும் ஒரு காதல்..!

நண்பர்களே தமிழோடு ஓர் உரையாடல் என்ற தலைப்பில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு கவிதையை வசன நடையில் எழுதி இருக்கிறேன் இதுவே எனது முதல் முயற்சி எப்படி இருக்கிறது என்று படித்துவிட்டு சொல்லுங்கள்….

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

தமிழோடு ஒர்
உரையாடல் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

தமிழே !
உன்னிடம்
சில கேள்வி கேட்க
எனக்கு நீண்ட நாள் ஆசை …

அதற்கு பதில் சொல்வாயா?
கேள் மகனே
ஐயோ! எங்கிருந்தோ
ஒலி வருகிறது… !!!

நான்தான் தமிழ்
பேசுகிறேன்….
கேள் மகனே
உன் கேள்விகளை…..

“பாரதியார் சொன்னார்
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனிமை காணோம்”என்று
ஏன்
அவ்வாறு சொன்னார் ?

இங்கு இனிமை என்பது
தேனில் உள்ள
இனிமையல்ல
இசையில் உள்ள
இனிமையைக் குறிக்கிறது….
என்னில் இருக்கும்
வல்லினம் மெல்லினம்
இடையினம்
எழுத்துக்களைப் போல்
எந்த மொழியிலும்
இல்லை என்பதால்
பாரதியார் அப்படி
சொன்னார்….

மிக்க மகிழ்ச்சி ….

அடுத்த கேள்வி
பாரதிதாசன் சொன்னார்
உன்னை ‘அமுதென்று’
அதற்கு பொருள் என்னவோ?

அது
என்னை ருசித்தவர்களுக்கு
மரணமே! இல்லை என்பதால்
அவர்
அப்படிச் சொல்லி இருப்பார்…
ஏனெனில் ?
அமுதம் உண்டவர்களுக்கு
மரணம் இல்லை என்பது ஐதீகம்…

உதாரணமாக
என்னை உண்டவர்கள்
தொல்காப்பியர்
வள்ளுவன்
கம்பர் இளங்கோவடிகள்
பாரதியார் பாரதிதாசன்
இன்னும்
சொல்லிக் கொண்டே
போகலாம்
ஏராளம் ஏராளம்….
இவர்களக் இன்னும் மரணமே
நிகழவில்லையே மனதளவில்..

அடுத்த கேள்வி…

கேள் மகனே…. !

“தமிழ் மொழி
எல்லா மொழிக்கும்
தாய்மொழி” என்று
சொல்கிறார்களே எப்படி ?

அதுவா
சொல்கிறேன்
கேள் மகனே….

ஒன்றில் ஒன்று உருவாகி
பிறக்க வேண்டும் என்றால்
“உயிரும் மெய்யும் “
இருக்க வேண்டும் அல்லவா !
அந்த பொருளில் அவர்
அவ்வாறு கூறியிருப்பார்….

அற்புதம் அற்புதம்
மிக்க மகிழ்ச்சி….

அடுத்த கேள்வி….

“கல் தோன்றி
மண் தோன்றா முன்
தோன்றிய மொழி”
நீ என்று சொல்கிறார்கள்
அப்படியானால்
நீ மட்டும் எப்படி
இன்னும்
அழியாமல் இருக்கிறாய்?

சொல்கிறேன் கேள்…..
பாறைக்கு நான் என்ற
அகங்காரம் இருந்தது
அது உடைந்து
கல்லாது….
கல்லுக்கும்
அந்தப் புத்தி
சிறிதளவு இருந்தது
மண்ணானது….
கவனித்தாயா மகனே
மண் எதுவும் ஆகவில்லை….
ஏன் தெரியுமா ?
அதற்கு நான் என்ற
அகங்காரம் இல்லை
உன் காலடியில்
கிடந்தாலும் உன் பாதத்தை
அது காயப்படுத்துவதில்லை…

அதுபோலத்தான்
247 எழுத்துக்கள்
எண்ணில் இருந்தாலும்
எனக்கு அகங்காரம் இல்லை
அதனால் தான்
காலமும் என்னிடம்
தோற்றுப் போனது…..

அது மட்டுமல்ல
நான் கடல் போல்
உள்ளம் கொண்டவள்….
கடல் தண்ணீரில்
எது கலந்தாலும்
எதிர்ப்பு தெரிவிக்காது
வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததைக்
கரையில் தள்ளிவிடும்….
அதுபோலத்தான்
என்னில்
எத்தனை மொழிகள் கலந்தாலும்
நான் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை
வேண்டியது
எனக்கு உரமாகும்
வேண்டாதது
என்னிலிருந்து கழிவாகும்…

எத்தனை ஆறு
நதிகள் கடலில்
கலந்தாலும்
கடலின் தனித்தன்மை
மாறாது
அது போல தான்
என்னில்
எத்தனை மொழிகள்
கலந்தாலும்
என் தனித்தன்மையை
அழித்து விட முடியாது……

வேண்டுமானால்
என்னோடு சேர்ந்து
அவைகளும்
திறமை பெறலாம்…..

அற்புதம் அற்புதம்
அருமை அருமை தமிழே!
உனது விளக்கம்….

புரியாதது புரிந்தது
தெரியாதது தெரிந்தது
புலராதது புலர்ந்தது….

“கடைசியாக
ஒரே ஒரு கேள்வி
என்னை ஏன்
மகனே !”என்று
அழைத்தாய்
தோழனே!
நட்பே !
உறவே! தம்பியே !என்று
அழைத்திருக்கலாமே?

நீ எனக்காக
கவிதை எழுதியதை விட
என்னில்
நிறைய எழுதி இருக்கிறாய் என்பதை
நான் நன்கு அறிவேன்….

அப்படி என்றால்
நீ தமிழ் அன்னைக்கு தானே
பிறந்திருக்க வேண்டும்
அதனால் தான்
மகனே !என்று அழைத்தேன்….

உண்மை உண்மை
தமிழ்தாயே! வாழ்க !
நீயே உனது விளக்கத்தில்
மெய் சிலிர்க்கிறது …
மெய்ஞானம் பிறக்கின்றது
சரி மகனே….
நான் போய் வருகிறேன்
வேறு ஏதும்
சந்தேகம் வந்தால்
கூப்பிடு வருகிறேன்…..

போய் வா அன்னையே !
என்னில்
இனி சந்தேகமே வராது….
வேண்டுமானால்
சந்தோஷம் வரும் போது கூப்பிடுகிறேன்…..!! *கவிதை ரசிகன்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *