மோடியின் அமைச்சர்களும், அரச உயரதிகாரிகளும் இந்தியத் தடுப்பு மருந்தையே பெற்றுக்கொள்கிறார்கள்.

மனிதர்களுக்கிடையேயான தமது கடைசி பரிசோதனைகளை முடித்து விபரங்களை இதுவரை வெளியிடாத பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவக்ஸீன் தடுப்பூசி பல இந்தியர்களாலும் தவிர்க்கப்பட்டு வந்தது. அதையே தற்போது தடுப்பூசி பெற்றுவரும் மோடியின் அமைச்சர்களும், உயரதிகாரிகளும் போட்டுக்கொள்கிறார்கள்.

இந்தியாவில் தடுப்பூசி கொடுக்கப்பட ஆரம்பித்தவுடன் முதல் கட்டமாக அது மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களிடையே பலரும் அஸ்ரா செனகா நிறுவனத்தின் கொவிஷீல்ட்டையே பெற்றுக்கொண்டார்கள். இந்தியத் தயாரிப்பான கொவக்ஸீன் கொடுக்கப்பட்ட இடங்களில் தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.

கடந்த தினங்களில் தடுப்பூசி பெற்றுவரும் மோடி, அமித் ஷா உட்பட்ட இந்திய அமைச்சர்கள் தங்களுக்குக் கொவக்ஸீன் தடுப்பூசியே வேண்டுமென்று கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள். அதையடுத்து அரசின் உயரதிகாரிகளும் அவ்வழியையே பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

“இந்தியாவின் உள் நாட்டுத் தடுப்பு மருந்து நம்பிக்கையானது, பாதுகாப்பானது,” என்று கோவக்ஸ் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்ட மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹரிஷ் வர்த்தன் டுவீட்டினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகளும் கொவக்சீனுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்து டுவீட்டினார்கள்.

இதுவரை இந்தியாவில் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்டவர்களிடையே 12 விகிதத்தினர் மட்டுமே கொவக்ஸீன் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள். அதன் கடைசிக் கட்ட ஆராய்வுகள் முடிந்து இன்னொரு மாதத்துக்குள் விபரங்கள் வெளியாகிவிடும் என்று பாரத் பயோடெக் அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *