பெய்ரூட் துறைமுகத்தின் நச்சுப்பொருள் பெருவிபத்தினாலுண்டான நச்சுக் குப்பைகளை ஏற்றிக்கொண்டு ஜேர்மனிக்குப் போகிறது ஒரு கப்பல்.
ஆகஸ்ட் 2020 இல் லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் உண்டாகிய மிகப்பெரும் வெடி, தீவிபத்தினால் அப்பிராந்தியமே பாழாகிக் கிடக்கிறது. அங்கே கிடக்கும் குப்பைப்பொருட்கள் பெரும்பாலும் கடும் நச்சுத் தன்மை வாய்ந்தவை. அப்பிராந்தியத்தைத் துப்பரவு செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வசதியில்லாமலிருக்கிறது லெபனான்.
பல பிரச்சினைகளால் அரசும் முடமாகிக் கிடக்கும் இச்சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் சில லெபனானுக்கு உதவ முன்வந்திருக்கின்றன. அவ்வுதவிகளில் ஒன்றாக பெய்ரூட் துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் நச்சுக் குப்பைகளை அகற்றி உதவ ஜேர்மனி முன்வந்திருக்கிறது. 59 கொள்கலன்களில் அங்கிருக்கும் குப்பையை ஏற்றிக்கொண்டு ஜேர்மனிக்குக் கொண்டுபோகிறது ஒரு கப்பல்.
லெபனானுக்கு இருக்கும் பல பிரச்சினைகளுடன் அது ஒரு சிறிய நாடாகவும் இருப்பதால் நச்சுக் குப்பைகளைச் சரியான முறையில் கையாளும் வசதியும் கிடையாது. Combi Lift என்ற ஜேர்மனிய நிறுவனம் பெய்ரூட் துறைமுகத்தைச் சுத்தம் செய்து அங்கிருக்கும் நச்சுக் குப்பையைக் கப்பலிலேற்றும்படி ஜேர்மனிய அரசு தனது தூதுவராலயம் மூலமாக உதவியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்