கட்டுப்பாட்டு நீக்கங்கள் காரணமாக தீவிரம் குறைந்த நான்காவது அலை சாத்தியம், என நிபுணர்கள் கணிப்பு.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு ஓரளவு இயல்பு நிலை திரும்புகிறது.மருத்துவமனைகளின் நெருக்கடி நாளாந்தம் குறைந்து வருகிறது. தடுப்பூசி ஏற்றுவது தீவிரமாக இடம்பெறுகிறது.

கோடை விடுமுறைப் பயணங்களைத் திட்டமிடுவதற்காகப் பலரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் அக்கறையாக உள்ளனர். குறிப்பாக இளவயதினர் ஊசி போடுவதற்கு ஆர்வமாய் முன்வருகின்றனர்.

இந்த நிலையில் வைரஸின் அடுத்தடுத்தஅலைகள் தோன்றுமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. “ஆம் அதற்கு வாய்ப்பிருக்கிறது” – என்கின்றனர் மருத்துவர்கள் . தற்போதைய கட்டுப்பாடற்ற நிலைமைகள் அடுத்து வரும் நாட்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம். அது பின்னர் நான்காவது அலையாக உருவெடுத்தாலும் முந்திய வேகம் இனி இருக்காது என்று பாரிஸ் Pitié-Salpêtrière மருத்துவமனையின் தொற்று நோயியலாளர் Renaud Piarroux தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.

தடுப்பூசி ஏற்றியவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது கடந்த மார்ச், ஏப்ரலில் ஏற்பட்டது போன்ற ஒரு தீவிரநெருக்கடி இனி நான்காவது அலையில்உருவாக வாய்ப்பில்லை – என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

மக்கள் தொகையில் தொற்று வாய்ப்பு உள்ள பெரும் பங்கினர் தடுப்பூசி மூலம் நோய்க் காப்புப் பெற்றுள்ளனர். அது இனிமேல் வைரஸ் பரவலில் தாக்கம் செலுத்தும். – என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பிரான்ஸில் 23 மில்லியன் பேருக்கும்அதிகமானோர்( 23,335,997) முதலாவதுதடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.சுமார் ஒன்பது மில்லியன் (9,738,741) பேர்இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள் ளனர். ஜூன் மாத நடுப் பகுதிக்குள்மொத்தம் 30 மில்லியன் பேருக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றுவதை அரசு தனது இலக்காகக் கொண்டுள்ளது.

இதேவேளை -இந்தியாவில் தோன்றிப் பரவி வருகின்ற B.1.617 திரிபு வைரஸ் வரும் கோடை காலப் பகுதியில் தீவிரமாக மேலெழுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பொதுச்சுகாதாரப் பிரிவு நம்புகின்றது. இந்தியத்திரிபு வைரஸ் இதுவரை உலகில் 53 நாடுகளில் பரவி உள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. பிரான்ஸில் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்புடைய 80 தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துப் பயணிகளுக்கும் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தல்.

இங்கிலாந்தில் இருந்து வருகின்ற பயணிகளும் பிரான்ஸில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர். அங்கு பரவி வருகின்ற இந்தியத் திரிபு வைரஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரான்ஸில் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இத்தகவலை நேற்று அறிவித்திருக்கிறார். கட்டுப்பாடுகள் பற்றிய விளக்கங்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

ஜேர்மனியும் இங்கிலாந்து பயணிகளுக்கு இது போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்தே பிரான்ஸின் தீர்மானம் வெளியாகி இருக்கிறது.

பிறேசில், இந்தியா, இலங்கை, துருக்கிஉட்பட 16 நாடுகளின் பயணிகளுக்கு பிரான்ஸில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளன.தனிமைப்படுத்தப்படுவோர் தங்கியிருக்கின்ற இடங்களை பொலீஸார் கண்காணித்து வருவர். மீறி நடப்போர் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ஈரோக்கள் வரை அபராதத் தொகை செலுத்த நேரிடலாம்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *