சமீப வாரங்களில் பெலாரூஸில் நடந்த அரசியல் அதிரடிகளால் பலர் தமது நாட்டுக்குள் புகுந்துவருவதாகக் குறிப்பிடுகிறது லித்வேனியா.
அரசியல் விமர்சகரொருவர் தனது நாட்டுக்கு மீதாக விமானத்தில் பறக்கும்போது கட்டாயப்படுத்தி விமானத்தை இறக்கி அவரைக் கைதுசெய்திருந்தது பெலாரூஸ். சர்வாதிகார ஜனாதிபதி லுகசென்கோவின் அந்த நடவடிக்கை நாட்டின் மக்களைக் கடுமையாக அதிரவைத்திருப்பதால் அவர்கள் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெலாரூஸின் எல்லை நாடுகளிலொன்றான லித்வேனியா இன்று மட்டும் 52 பேரை எல்லையினூடாகப் புக முயன்றதற்காகக் கைதுசெய்திருப்பதாகத் தெரிவிக்கிறது. இவ்வாரத்தில் மொத்தமாகத் தாம் 125 பேரைக் கைது செய்திருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பெலாரூஸைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கும் லித்தாவன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் எல்லைக் காவலுக்காக உதவி வேண்டுகிறது.
எல்லைகளுக்கூடாக வருபவர்களில் பெலாரூஸைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு நாடுகளின் அகதிகளும் இருக்கிறார்கள் என்கிறது லித்வேனியா. பெலாரூஸ் அரசு வேண்டுமென்றே தனது அதிகாரிகளின் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வேறு நாட்டு அகதிகளையும் பணம் வாங்கிக்கொண்டு நுழைய உதவுகிறது என்பது லித்வேனியா உள்துறை அமைச்சரின் குற்றச்சாட்டாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்