கோட்டை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த 16 பேர் மின்னல் தாக்கிப்பலி!

இந்தியாவின் வட மாநிலங்களில் இடிமின்னல் தாக்குதல்களினால் அறுபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பதினாறு பேர் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கோட்டை ஒன்றில் நின்றிருந்தவேளை தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற பன்னி ரெண்டாம் நூற்றாண்டு கால அமர் கோட்டையின் (Amer Fort) பார்வையாளர் கோபுரம் ஒன்றில் செல்ஃபி எடுத்துக்கொண்டு நின்றிருந்தவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கி உள்ளனர். அங்குகோட்டையைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவர்களில் 16 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளவயதினர். மின்னல் தாக்கியதும் பதற்றமடைந்த பலரும் கோபுரப் பகுதியை விட்டுப் பாய்ந்து வெளியேற முற்பட்டபோது வீழ்ந்து காயமடைந்தனர் என்று ராஜஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கோட்டையின் பார்வைக் கோபுரத்தின் ஒரு பக்கத்தில் அமைந்திருக்கின்ற ஆழமான அகழிக்குள் எவராவது வீழ்ந்தனரா என்பதை அறிய மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவிய ஜெய்பூர் நகரைப் பலத்த மழையுடன் இடிமின்னல் தாக்குகின்ற காட்சிகள் பல சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றபல மின்னல் தாக்குதல்களில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 41 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் பருவப் பெயர்ச்சி மழைக் காலத்தில் இது போன்ற இடிமின்னல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் அதனால் உயிரிழக்கிறார்கள்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் மேலும் மின்னல் தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று இந்திய வளிமண்டல ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

பூமி வெப்ப நிலை அதிகரிப்பது முன்னரைவிட மின்னல் தாக்குதல்களைத் தீவிரம் மிக்கவையாக மாற்றி வருகின்றது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *