ஹிட்லராகச் சித்திரித்துப் போஸ்டர்வரைந்தவர் மீது மக்ரோன் வழக்கு!

பிரான்ஸில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி களை வரைகின்ற மிக்கேலோஞ் புளோரி (Michel-Ange Flori) என்பவர், அதிபர் மக்ரோனை சர்வாதிகாரி ஹிட்லரின் உருவத்தில் வரைந்து பொது இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

“சுகாதார சர்வாதிகாரம்” என்ற கோஷங்களுடன் நாட்டில் தடுப்பூசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றசூழ்நிலையில் Toulon (Var) என்ற நகரில்காட்சிப்படுத்தப்பட்ட மக்ரோனின் அந்த சுவரொட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துப் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

தடுப்பூசி ஏற்றுவதைக் கட்டாயமாக்கும்விதமான சட்டங்களை முன்னெடுத்துவருவதைக் குறிக்கும் வகையில்”கீழ்ப்படியுங்கள், தடுப்பூசி போடுங்கள்” என்ற வாசகத்துடன் மக்ரோனின் உருவத்தை ஹிட்லரது தோற்றத்தில் வரைந்தமைக்காக அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். வழக்கைத் தொடுத்தவர் வேறு யாரும் அல்லர். குடியரசுத் தலைவர் மக்ரோனே தனது சட்டவாளர்கள் ஊடாகToulon நகர நீதிமன்றில் வழக்கைப் பதிவுசெய்துள்ளார் என்ற தகவலை பாரிஸ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பிரான்ஸின் அரசுத் தலைவரை வெளிப்படையாக அவமரியாதை செய்தார் என்று அவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. உள்ளூர் பொலீஸ் நிலையம் ஒன்றுக்கு அழைக்கப்பட்டார் என்ற தகவலை மிக்கேலோஞ் புளோரி உறுதிப்படுத்தியுள்ளார்.

“மக்ரோனின் பூமியில் முகமது நபியின் பின்புறத்தை வரைந்தால் அது கேலிச்சித்திரம், மக்ரோனை ஒரு சர்வாதிகாரி என்று கேலி செய்வது மட்டும் நிந்தனையா?”-இவ்வாறு மிக்கேலோஞ் புளோரி தனது ருவிட்டர் பதிவு ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரபல கேலிச் சித்திர வார இதழான “சார்ளி ஹெப்டோ “வெளியிடுகின்ற முகமது நபியின் ஓவியங்கள் தொடர்பான விவகாரத்தை அவர் இங்கே தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்.

கருத்தோவியர் மிக்கேலோஞ் புளோரி(Michel-Ange Flori) இவ்வாறு தனது போஸ்டர்களுக்காகச் சட்ட நடவடிக்கைகளைஎதிர்கொள்வது இது முதல் முறையல்ல. அரசுத்தலைவர்கள் உட்பட பலரைப் பல்வேறு விதமான சுவரெட்டி ஓவியங்க ளில் வரைந்து இதற்கு முன்னரும் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கியவர்.கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காகவே தொடர்ந்து சுவரொட்டிகளை வரைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *