மூன்றாவது ஊசி உடனே வேண்டாம் வறிய நாடுகளுக்குப் பங்கிடுங்கள்!

உலக சுகாதார அமைப்பு கோரிக்கை.

செல்வந்த நாடுகள் தங்கள் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்கு முன்னர் வறிய நாடுகளுக்குத் தடுப்பூசிகிடைக்க உதவவேண்டும்.

இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.தங்களது பிரஜைகளில் பெரும் பங்கினருக்கு இரண்டு தடுப்பூசிகளை வேகமாகஏற்றி முடித்த சில நாடுகள் அடுத்த கட்டமாக நோயாளிகள் மற்றும் பலவீனமான நிலைமையில் உள்ளவர்களுக்கு மூன்றாவதாக மேலும் ஒர் ஊசியை வழங்குவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. மிக வேகமாகப் பரவி வருகின்ற டெல்ராவைரஸ் தடுப்பூசி ஏற்றியோருக்கும் தொற்றி வருவதால் பலவீனமான உடற் காப்பு சக்தி கொண்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி அவசியம் என்று மருத்துவ அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இஸ்ரேல், ஜேர்மனி போன்ற நாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்குஒர் ஊக்கியாக (booster shots) மூன்றாவதுதடுப்பூசியை ஏற்றுவதற்குத் தீர்மானித்துள்ளன.

இந்த நிலையிலேயே அதனை நிறுத்துமாறு அல்லது தாமதிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அதன் உறுப்பு நாடுகளைக் கேட்டிருக்கிறது.சகல நாடுகளிலும் சனத் தொகையில் ஆகக் குறைந்தது பத்து வீதத்தினருக்காவது முதலாவது தடுப்பூசியை எதிர்வருகின்ற செப்ரெம்பர் மாத இறுதிக்குள் ஏற்றி முடிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு வசதியாக வளர்ந்த நாடுகள் மூன்றாவது தடுப்பூசித் திட்டத்தை செப்ரெம்பர் இறுதிவரை தாமதப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானொம் கெப்ரேயஸிஸ்(Tedros Adhanom Ghebreyesus) கேட்டுள்ளார்.

தங்களது மக்களை டெல்ரா வைரஸிடம் இருந்து பாதுகாத்துவிட வேண்டும் என்று நாடுகள் கொண்டுள்ள கவலையை, கரிசனையை ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியில் பெரும் பகுதியைத் தங்களது மக்களுக்குப் பயன்படுத்திய நாடுகள் அதன்பிறகும் ஊசியை தங்கள் தேவைகளுக்குஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது-என்று அவர் தெரிவித்துள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *