இலங்கையில் தொற்று மோசம், இந்தியாவில் இருந்து ஒக்சிஜன்!

வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியைஎதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் நிலைமை தீவிரமான ஒரு கட்டத்தை எட்டக்கூடும் என்று தொற்று நோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

https://vetrinadai.com/news/sri-lanka-vaccine-passport/

முன்னேற்பாடாக அடுத்த வாரம்சுமார் நூறு மெற்றிக் தொன் மருத்துவஒக்சிஜன் இந்தியாவில் இருந்து இறக் குமதி செய்யப்படவுள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்திருக்கிறார்.

தேவையைப் பொறுத்து தொடர்ந்து வாராந்தம் அதே அளவு ஒக்சிஜன் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சையளிக்கப்படவேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கையை அடுத்தே ஒக்சிஜன் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளாந்த இறப்பு எண்ணிக்கை 200 என்ற சராசரியில் உள்ளது. உரிமை கோரப்படாமல் சவச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்ற நாற்பது சடலங்களை உடனடியாகஅப்புறப்படுத்துமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்பத்திரி சவச்சாலைகளில் குளிரூட்டி வசதிகள் நிறைந்து விட்டதால் சடலங்களை விரைவாக எரியூட்டுவதற்கு கொழும்பு மாநகரசபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இலங்கையில் ஒக்ரோபர் நடுப்பகுதியில் டெல்ரா வைரஸின் உச்சக்கட்டமான அலை உருவாகும் என்று உலக சுகாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய அளவிலான தொற்றுநோயியல் வல்லுநர்களை உள்ளடக்கிய சுயாதீன நிபுணர்கள் குழு ஐந்தாவது தடவையாகக் கூடி நாட்டின் சுகாதார நிலைவரத்தை ஆராய்ந்துள்ளது.

சுகாதாரக் கட்டமைப்பின் எதிர்பாராதசீர்குலைவை நாடு மிக விரைவில் சந்திக்க நேரிடும் என்று அக்குழு மதிப்பிட்டுள்ளது. மருத்துவமனைகளின் படுக்கைகள் மற்றும் வசதிகள் 85 வீதத்துக்கு மேலும், அவசர சிகிச்சைப் படுக்கைகள் 90 வீதத்துக்கு அதிகமாகவும் நிறைந்து விட்டன. ஒக்சிஜனில் தங்கியிருக்கின்ற நோயாளர்களது எண்ணிக்கை 528 இல் இருந்து ஓரிரு நாட்களில் (கடந்த 10 ஆம் திகதி நிலவரப்படி) 646 ஆக உயர்ந்துள்ளது என்பதை நிபுணர்கள் குழுஅதன் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது.

ஓகஸ்ட் 9 ஆம் திகதி நிலைவரத்தின் படிநாட்டின் சனத்தொகையில் 15 வீதத்தினர்மாத்திரமே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். தடுப்பூசி ஏற்றியவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கு 2-3 வாரகாலம் எடுக்கும்.எனவே அந்தக் காலப்பகுதியை நிறைவு செய்யாதவர்களும் வைரஸின் ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும். தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் மற்றும் முதல் ஊசியை மட்டும் ஏற்றியோர் தொற்றினால் தீவிர பாதிப்புகளைச் சந்திக்கின்ற வகையினரிலேயே அடங்கியுள்ளனர்- என்பதை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

நிபுணர் குழு அதன் முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக நான்கு வார காலப்பகுதிக்கு நாட்டை முடக்குமாறு கேட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 18ஆயிரம் உயிரிழப்புகளைத் தவிர்க்கவேண்டுமாயின் தேசிய அளவிலான முடக்கம் அவசியம் என்று அது வலியுறுத்தியது. ஆனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு முடக்கப்படமாட்டாது என்று அறிவித்திருக்கிறார். தடுப்பூசி ஏற்றுவதில் கணிசமான முன்னேற்றத்தை எட்டிய வளர்ந்த நாடுகளைப் பின்பற்றி தடுப்பூசி அட்டையை நாளாந்த நடமாட்டங்களுக்கு கட்டாயமாக்கும் வழிமுறையை அவரது அரசு முன்னெடுத்துள்ளது.

செப்ரெம்பர் 15 முதல் பொது இடங்களுக்குள் செல்லவும் மாகாணங்கள் இடையே பயணிக்கவும் முப்பது வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அட்டை (vaccination card) கட்டாயமாக்கப்படுவதாக நாட்டின் கொரோனா தடுப்புச் செயலணிதெரிவித்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *