ஆப்கான் அகதிகளை அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி இடைநிறுத்தின!

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள்வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்.

ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்தியநிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்காஉட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சிலவார கால இடைவெளிக்குள்- நாட்டின் எண்பது வீதமான பகுதிகளை தலிபான் படைகள் கைப்பற்றி விட்டன. நாட்டின் இரண்டாவது, மூன்றாவது பெரிய நகரங்களாகிய கந்தஹார் (Kandahar) ஹெரத்(Herat) இரண்டையும் கைப்பற்றிவிட்ட தலிபான்கள் சனிக்கிழமை தலைநகரில் இருந்து 11 கிலோமீற்றர்கள் தொலைவில் நிலைகொண்டிருந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிய மக்கள் பலரும் தாங்கள் உலகத்தால் கைவிடப்படுவதாக உணர்கின்றனர். பெரும் பதற்றத்துக்கு மத்தியில் அதிபர் அஷ்ரப் கானி(Ashraf Ghani) நாட்டுக்கு ஆற்றிய ஓர் உரையில், தலிபான்களிடம் இருந்து தலைநகரைப் பாதுகாப்பதற்காக மீள அணிதிரளுமாறு தனது முப்படையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தலிபான்கள் மோதலைத் தவிர்த்து அரசியல் வழிமுறைகளில் அதிகாரத்துக்கு வருவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று ஐ. நா. செயலாளர்நாயகம் கேட்டிருக்கிறார்.

நாட்டின் தேசியத் தலைநகரான காபூல்வரும் நாட்களில் தலிபான்களிடம் வீழும்என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்குபெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா அங்குள்ள தனது ராஜதந்திரிகளையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக மூவாயிரம் துருப்பினரை காபூலில் இறக்கி உள்ளது.

இங்கிலாந்து தனது பிரஜைகள் வெளியேற்றுவதற்காக அறுநூறு படைவீரர்களை அங்கு அனுப்பியிருக்கிறது. பலநாடுகளும் தங்களது தூதரகப் பணியாளர்களது எண்ணிக்கையைக் குறைத்து மூடுவதற்கான ஆயத்த நிலையில் உள்ளன. டென்மார்க், நோர்வே தூதரகங்கள் மூடப்பட்டவிட்டன. டென்மார்க் தனதுதூதரகத்தில் பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது நாட்டில் அரசியல் புகலிடம் அளித்துள்ளது.

🇨🇦20 ஆயிரம் பேருக்கு🇨🇦கனடாவில் புகலிடம்

மிக முக்கிய உதவியாக கனடா நாடு பெண்கள், சிறுவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான சுமார் இருபது ஆயிரம் ஆப்கானிஸ்தானியர்களைத் தனது நாட்டில் குடியமர்த்த முன்வந்துள்ளது.

https://vetrinadai.com/news/usa-troops-afgan-evacuat/

அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினருக்கு மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றிவந்த நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கும் பலநாடுகளில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.ஆப்கானிஸ்தான் அரசியல் நிலைவரம் நிச்சயமற்ற நிலைமைக்குள் சென்றுகொண்டிருப்பதால் தத்தமது நாடுகளில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களைக் கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன.

சமீப காலமாக பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோருகின்ற வெளிநாட்டவர்களில் ஆப்கானிஸ்தானியர்களே முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும்சுமார் 8 ஆயிரத்து 886 ஆப்கானியர்கள் பிரான்ஸில் தமது தஞ்சக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

தற்போது இடம்பெறும் மோதல்களில்பல லட்சக்கணக்கானோர் உள் நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். அதனால் வரும் நாட்களில் அங்கிருந்து குடிபெயர்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. –

– பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *