இயல்பு நிலை நோக்கிய பாதையில் நகருகின்றது பிரான்ஸ் – பிரதமர்.

பிரான்ஸ் வைரஸ் நெருக்கடியில் இருந்து இயல்பு வாழ்வை நோக்கிய சரியான பாதையில் நகருகின்றது. கொரோனாவில் இருந்து இன்னமும் முற்று முழுதாக விடுபடாவிட்டாலும் வைரஸின் நான்காவது அலை எமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.விரைவிலேயே நாங்கள் மீண்டுவிடுவோம்.

பிரதமர் ஜீன் காஸ்ரோ இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார். ஸ்ரார்ஸ்பூ(Strasbourg) நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு விஜயம் செய்த பிரதமர் அங்குகருத்து வெளியிடுகையில்,”தனிநபர்களாகவும் கூட்டாகவும் நமக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் இந்தநெருக்கடியில் இருந்து முழுவதுமாக மீண்டுவிடமுடியும்” – என்று தெரிவித்தார்.

புதிய கல்வியாண்டுக்காக நாளை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.அதனால் வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று தொற்றுநோயியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அந்தப் பின்னணியிலேயே பிரதமர் இவ்வாறு நம்பிக்கையான செய்தியை நாட்டு மக்களுக்கு வெளியிட்டிருக்கிறார்.

தாதியர், மருத்துவமனைப் பணியாளர்கள், மூதாளர் இல்லப் பணி புரிவோர் போன்றோர் தவிர ஏனையோருக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்படமாட்டாதுஎன்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், நாட்டு மக்களில் 65 சத வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும், 72 சதவீதமானவர்கள் ஓர் ஊசியையும் பெற்றுள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டார்.

பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்கள் தவிர்ந்த நாட்டின் பெருநிலப்பரப்பில் வைரஸ் தொற்று வீதம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கட்டாய சுகாதா ரப் பாஸ் முறை உட்பட பிரான்ஸின் கொரோனாத் தடுப்பு உத்திகள் நல்லபலனை அளிக்கத் தொடங்கி உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஆனாலும் மாஸ்க்,சமூக இடைவெளி போன்றவற்றை உடனடியாகக் கைவிடுவது எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *