விடுமுறை கொண்டாட சீனாவின் ஹவாய்க்குப் போனவர்கள் மீது கடுமையான பொது முடக்கம்.

சீனாவின் தெற்கிலிருக்கும் ஹைனானிலிருக்கும் சன்யா தீவு இரண்டு வருடங்களாகக் கொவிட் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு மூடப்பட்டிருந்தது. அங்கே விடுமுறை செல்வதற்கான விசா சமீபத்தில் மீண்டும் கொடுக்கப்பட ஆரம்பித்தது. எனவே, நீண்ட காலத்துக்குப் பின்னர் அங்கே மக்கள் வெள்ளம் திரண்டது. ஆகஸ்ட் ஆரம்பத்தில் அங்கே கொரோனாத்தொற்றுக்கள் பரவத்தொடங்க, சீன அரசு அத்தீவுடன் தொடர்புடைய ரயில்கள், விமானங்களை ரத்து செய்துவிட்டது.

சன்யா தீவு உட்பட ஹைனான் பிராந்தியத்தின் பல நகரங்களிலும் ஆகஸ்ட் முதலாம் வாரத்தில் நூற்றுக்கணக்கான கொரோனாத்தொற்றுக்கள் பதியப்பட்டன. எனவே சீன அதிகாரம் அங்கெல்லாம் பொது முடக்கத்தை அறிமுகப்படுத்தியது. சன்யா தீவில் ஹோட்டல்களில் தங்கியவர்களெல்லாம் அங்கங்கே தொடர்ந்தும் தத்தம் செலவில் தங்கவேண்டும் என்று உத்தரவிடப்படிருக்கிறது. தீவிலிருந்து வெளியேற வேண்டுமானால் அவர்கள் ஏழு நாட்களுக்குள் ஐந்து தடவை தமக்குத் தொற்று இல்லை என்று பரிசோதனை மூலம் நிரூபிக்கவேண்டும்.

சன்யா தீவுக்குள் மட்டுஂமே சுமார் 80,000 சுற்றுலாப்பயணிகள் கொரோனாக் கட்டுப்பாட்டுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்களுக்கான சேவைகள் எல்லாம் கட்டுப்பாடுகளுக்குள்ளாகி நிறுத்தப்பட்டிருக்கின்றன. தங்கும் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டிருப்பதாகச் சீன அதிகாரம் தெரிவித்திருக்கிறது.இதேபோன்ற நடவடிக்கை ஷங்காய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் அந்த நகரம் மூடப்பட்டிருந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *