எலெக்றிக் உருளிகளுக்கு பிரான்சில் இனி பத்துக் கி. மீ. வேகக் கட்டுப்பாடு.

நகரின் நெரிசல் பகுதிகளில்தானாகவே வேகம் குறையும்.

பாரிஸில் எலெக்றிக் உருளிகளது சேவைகளை வழங்குகின்ற மூன்று நிறுவனங்கள் தங்கள் உருளிகளது வேகத்தைக் கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளன. அதன்படி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வலயங்களில்உருளிகளை மணிக்கு பத்து கிலோ மீற்றர்களுக்கு மேல் செலுத்த முடியாது.

வாடகைக்கு உருளிகளின் சேவையை வழங்கிவருகின்ற “Dott”, “Lime”, “Tier”ஆகிய நிறுவனங்களே இந்த வேகக் குறைப்பைச் செய்கின்றன. சொந்தமாக உருளிகளைப் பயன்படுத்துவோரை இந்த விதி கட்டுப்படுத்தாது.

பாரிஸ் நகரின் சுமார் 600 இடங்களில்நேற்று திங்கட்கிழமை முதல் வேகக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுஇந்த இடங்களில் உருளிகளைச் செலுத்தும்போது அவற்றின் வேகம் தானாகவே(automatically restricted) பத்துக் கி. மீற்றர்களாகக் குறையும்.

பாரிஸ் நகர சபையின் உத்தரவை அடுத்தே இந்த வேகத் தணிப்பு நடைமுறைக்கு வருகிறது. நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் 2019 இல் எலெக்றிக் உருளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட வேக எல்லை மணிக்கு 25 கிலோ மீற்றர்கள்ஆகும்.

பாரிஸ் நகரில் trottinettes électriques என்கின்ற மின் உருளிகளின் பாவனை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. அதனால் விபத்துக்களும் அடிக்கடி நடக்கின்றன. சனப் புழக்கம் மிகுந்தஇடங்களில் அவற்றைப் பயன்படுத்துகின்றவர்கள்-குறிப்பாக இளவயதினர் கண்டபடி – வேகம் தணிக்காமல் -செலுத்துவதால் பாதசாரிகள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர் என்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகனப் போக்குவரத்தைக் குறைப்பதற்கும் குறுகிய தூரங்களுக்கு இலகுவான பயணங்களைச் செய்யவும் உதவுகின்றஇந்த எலெக்றிக் உருளிகள் இப்போது நகரசபை நிர்வாகிகளுக்குப் பெரும் தலையிடியாக மாறிவருகின்றன.மின் உருளிகள் தொடர்புபட்ட விபத்துக்கள் காரணமாகக் கடந்த ஜனவரிக்குப் பிறகு மட்டும் 11பேர் உயிரிழந்துள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.