நேற்றினி நாளை வரும்…

கனவுகளும்
நாளையை நோக்கியே…
நினைவுகளும்
நாளையை நோக்கியே….

இன்றின் பரபரப்பு
மனதின் படபடப்பு…
வானம் உடைப்பெடுத்ததாய்….
பூமி பிளவு கொண்டதாய்….

இனி…
நாளை என்பது
இன்றிலிருந்து
வேண்டாம்…
நேற்றிலிருந்தே தொடங்கட்டும்!

கடந்து சென்ற நாட்கள்…
நேற்று கண்ட உலகம்…
கனவில் பூத்த
சொர்க்கம்…

பசுமை வயல்வெளியும்
பாய்ந்து ஓடிய நதிகளும்…
தழுவிச்சென்ற
தென்றலும்…
காதில் கேட்ட பாடல்களும்…

வசந்தம் நிறைந்த
வண்ணமிகு பொழுதுகள்…

நாளைய கனவுகள் யாவும்…
இனி,
நேற்றின் நினைவுகளாய்…

மீண்டு வந்திடாதோ
நேற்றுதான்…
மீண்டும் வந்திடாதோ
அந்த சொர்க்கம்…

பகைமை இன்றி
சுயநலமின்றி
தோளில் கைபோட்டு
தோழமை கொண்ட வாழ்க்கை…

நேய விதைகளில்
பசுமை பூத்த பூமி…
நம் மனம்போல்
பரந்து விரிந்து கிடந்த எல்லை….

மீண்டும் வரட்டும்
நேற்று…
நாளைய பொழுது
நேற்றையை நோக்கி
திரும்ப மாற்றம் பெறட்டும்!

எழுதுவது : பாரதிசுகுமாரன்