மாற்றம் வேணுங்க…

வள்ளுவரு குறளெல்லாம்
வாழ்க்கை சொல்லுங்க!-நம்ம, பாரதியின் பாட்டெல்லாம்
புரட்சி செய்யுங்க!

எழுத்துக்கொரு சக்தியுண்டு
எல்லாம் சொன்னாங்க! – இப்போ,
எழுதுகிற எழுத்துகளை
படிக்க யாருங்க?

பஞ்சம்பசி என்றபோதும்
புரட்சி வல்லீங்க! – இங்கே,
லஞ்சம் ஊழல் கண்டபோதும்
கோபம் வல்லீங்க!

வள்ளலாரு சொன்னதெல்லாம்
உண்மை வார்த்தைங்க! – பொதுக்
கடைய தெறந்து வச்சபோதும்
யாரும் வல்லீங்க!

கால மாற்றம் மனுஷனையும்
மாத்திப் போச்சுங்க! -அந்த,
மாற்றத்தையும் நமதெழுத்து
மாத்த வேணுங்க!

எழுதி எழுதி குவிப்பதிலே
ஒன்னு மில்லீங்க!- நாம,
எழுதுகிற எழுத்தினிலே
ஏற்றம் வேணுங்க!

நமதெழுத்தால் நாட்டினையே
மாற்ற வேணுங்க! – அதுக்கு,
எழுத்துகளில் வீரத்தையே
நிரப்ப வேணுங்க!

எழுதுவது : பாரதிசுகுமாரன்