மரியானுக்கென் மரியாதை

மரியாள் வயிற்றுத்தித்த மரியான்
கயமை சிறிதும் அறியான்
நீளும் அன்பினில் குறையான்
நல்லறம் புரிந்த இறை ஆண்

தொழுவமே உன் பிறப்பு
உனைத் தொழுதலே உனைப் பற்றுவோர்க்குப் பெருஞ்சிறப்பு

வருத்தப்படுபவனின் பாரத்தையும் தாங்குகிற நெஞ்சுரம்
வழிதவறிய ஆடுக்கும் அரவணைப்பு உன் கரம்

நகத்தளவு அன்பில்லாதவர்களுக்கு மத்தியில் நெஞ்சகமுழுக்க அன்பு நிரம்பிய பாலன்
அன்பாளன்

நீ ஆயுதமெடுக்காமல் அன்பெடுத்து மனிதமாண்டவன்
மரிப்பின்றி உயிர்தெழுந்த மனத்து ஆண்டவன்

ஏசுகிறவரையும் புன்னகைத்து ஏற்றுக்கொண்ட இயேசு
உன் மலைப்பொழிவு கருத்ததனில் துளியுமில்லையே மாசு

மகுடமகற்றி முள்கிரீடம் அணிவித்த போதும்
சிலுவையாணி சதையிறங்கிய போதும்
ஏதுமின்றி ஏற்று நின்றாய்

வெள்ளிக்காசுக்குனை காட்டி நின்றவனையும் மன்னித்தே வென்றாய்

அன்பே உலகை உய்யச்செய்யுமென
வாழ்ந்திட்ட பேரான்மாவே
உன் பிறந்த நாளுக்கென் வணக்க வாழ்த்து
எங்கிருந்தாலும் என்னையும் உன் அருள்நேசத்தில் வாழ்த்து

புனிதனின் அவதார நன்னாளில்
எளியனின் கவிமாலை
உனை வாழ்த்த பிறந்திட்ட இளங்காலை

எழுதுவது: சீனி.தனஞ்செழியன்