சீன உதைப்பந்தாட்ட வீரர்களின் உடலில் பச்சை குத்தியிருப்பவையெல்லாம் அகற்றப்படவேண்டுமென்று அரசு உத்தரவு.

சீனாவின் உதைபந்தாட்ட விரர்களில் பெரும்பாலானோர் தமது உடலின் பல பாகங்களிலும் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்கள். உதைபந்தாட்ட மோதல்களின் போது அவைகளைத் தமது உடைகளினாலோ, வேறு துண்டுகளாலோ மறைத்துக்கொள்வது வழக்கம். பச்சை குத்திக் கொள்ளல் ஆளும்கட்சியான கொம்யூனிஸ்ட் கட்சியின் “களங்கமற்றது” என்ற கோட்பாட்டுக்கு இடையூறானது என்று அரசியல் உயர்மட்டம் கருத்துக் கொண்டிருக்கிறது.

எனவே தேசிய அணியில் விளையாடும் விரர்கள் தமது உடலிலிருக்கும் அந்தக் “களங்கங்களை,” அகற்றிவிடவேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சு அறிவுறுத்தியிருக்கிறது. இனிமேல் வீரர்கள் எவரும் பச்சை குத்திக்கொள்ளலாகாது என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

சீனாவின் தேசிய உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் 20 குழுக்கள் இனிமேல் பச்சை குத்திக்கொண்டிருப்பவர்களைத் தமது அணியில் சேர்த்துக்கொள்ளலாகாது. அக்குழுக்களில் விளையாடுபவர்களை விட இளவயதினர் கூட பச்சை குத்தியிருப்பின் விளையாட்டு அணிகளில் சேர்த்துக்கொள்ளப்படலாகாது என்ற விளையாட்டுத்துறை அமைச்சு முடிவு செய்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்