என் இனிய ஓவியமே

என் தூரிகையில்
தங்கச் சிலையாக
உயிர் பெற்றவளே!

யார் வரவை
தேடுகிறாய்!

உன்னைப் படைத்த என்னைக் காண ஏங்குகிறாயோ!

நாமே தங்கச் சிலை என்றால் படைத்த நான் மாணிக்கமோ வைடூரியமோ என்று சிந்திக்கிறாயோ!

உனக்கேற்ற மணவாளனுக்காக காத்திருக்கிறாயா!

தென்றலை தூது விட நினைக்கிறாயா!

வண்ணத்துப் பூச்சியிடம்
உடையின் வண்ணங்களைப் பெற்றுக் கொண்டாயோ!

மின்மினிப் பூச்சிகளின் மொத்த ஒளியையும் பெற்றுக் கொண்டதும்
நீ தானோ!

வரைந்த என்னையே உன்.அழகு திக்கேமுக்காடச் செய்து விட்டதே!

ரவிவர்மாவின்
ஓவியத்துடன்
போட்டி போட தயாராகி விட்டாயோ!

சேலை முந்தானையை
நேர்த்தியாக கையில் பிடித்துள்ள
ஒயிலான ஓவியமே!

நீ எல்லோரா குகையின் சிற்பமோ என்று காண்பவர் தடுமாறி விடுவரோ!

மார்கழி மாதத்தின் அழகிய வரவே!

உனைக் காண வைகை நதியும் ஓடி வருகிறாளே!

வண்ண வண்ண பறவைக் கூட்டங்களும் வீட்டு வாசலில் தவம் செய்கிறார்களே!

என் கைவண்ணத்தில் வந்தவளே உன்னால்
பெருமை அடைந்தது
என் கைகளும் எண்ணங்களும்!

என் ஓவியப் பெண்ணே இருந்து விடுகிறாயா என்னுடன் காலமெல்லாம்

எழுதுவது : விஜயலட்சுமி