ஐரோப்பாவில் அரைவாசிப் பேரை ஒமெக்ரோன் வைரஸ் பீடிக்குமாம்! உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு.

ஒமெக்ரோன் தொற்றுக்கள் தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால் ஐரோப்பாவின் மொத்த சனத் தொகையில் அரைவாசிப் பங்கினரை அது பீடிக்கும்.அடுத்த நான்குமுதல் ஆறு வாரங்களில் இதனை எதிர்பார்க்கலாம்.

உலக சுகாதார நிறுவன அதிகாரிகள்இவ்வாறு மதிப்பிட்டிருக்கின்றனர்.செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பியப் பிராந்தியப் பணிப்பாளர் ஹான்ஸ்குளுகே(Hans Kluge), ஐரோப்பாவில்”மேற்கில் இருந்து கிழக்காகப் பெரும் தொற்றலை வீசுகின்றது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உலக சுகாதார அமைப்பின்(WHO) ஐரோப்பியப் பிராந்தியம் எனப்படுவது மத்தியஆசிய நாடுகளையும் உள்ளடக்கி சுமார்53 நாடுகளைக் கொண்டது . அவற்றில்50 நாடுகளில் ஒமெக்ரோன் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று ஹான்ஸ் குளுகே தெரிவித்தார்.

உலகம் முழுவதும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் திட்டம் ஒன்றின் மூலம் மட்டுமே இந்தத் தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவரலாம். வசதி படைத்தநாடுகள் தங்கள் தங்கள் மக்களுக்கு பூஸ்ரர் டோஸ்களை வழங்குவதன் மூலம்அது சாத்தியமாகி விடாது. அது சரியான உத்தி அல்ல என்று சுகாதார நிறுவனம்கருதுகிறது.

பிரான்ஸில் செவ்வாய்க் கிழமைவெளியான தரவுகளின் படி ஒருநாள்தொற்று எண்ணிக்கை மூன்று லட்சத்து 68 ஆயிரம் (368,149) என்ற அளவை எட்டியுள்ளது. வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் தொற்றுக்கள் நாளாந்தம் மடங்குகளாக அதிகரித்துவருகின்றன. உலக அளவில் ஒமெக்ரோன் மருத்துவமனை அனுமதிகளை அதிகரித்துள்ளது ஆனால் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குமாரதாஸன். 12-01-2022