பரீட்சை முடிந்தது

விழி பேச முனைந்த ஒவ்வொரு முறையும் மமதையில் மனம் தள்ளித் தள்ளிப் போனது

என்றோ ஒரு நாளில் சிறு கசப்பொன்று உறவை பிரித்து வைத்திருந்தது

யார் முற்றுப்புள்ளி வைப்பதென்ற கேள்வியிலேயே காலம் உருண்டு போனது

பேரன்பின் காரணமோ என்னவோ
ரணங்கள் இதயத்தை விட்டுப் போக மறுத்தன

எத்தனையோ சந்தர்ப்பங்களை காலம் வகுத்து தந்தது
ஆனாலும்
தோல்வி பயம்
விட்டுப் போகவில்லை

சுட்டப் புண்ணும் ஆறிப் போகையில் விழுந்த வார்த்தை மட்டும்
மறந்து போக மறுத்ததை மனம் ஏற்றதே..

எல்லாம் ஒரு நாளில் முடிந்து போகும்
என்பதை மறந்து
ஆட்டம் போட்டது
இந்த பாழாய்ப் போன ஆணவம்

அய்யகோ ….

இதோ இங்கு
சட்டென
ஆட்டம் அடங்கியது
பரீட்சை முடிந்தது

இனி
பிறவி பெற்றா உன்னில்
நான் வைத்த அன்பை தந்திடக் கூடும்…

அர்த்தமற்ற ஆணவம் அன்பை அழித்துப்போனதே..

அழுகின்றேன்
தேம்பித் தேம்பி,.

இனி ஒருமுறை உன்னிடம் பெற்றிட முடியாத
அன்பிற்காக…

எழுதுவது :ராதை சுப்பையா,ஈப்போ,மலேசியா