இறுதியில் இவ்வளவு நிலமா கிடைக்கப்போகிறது…!

ஆறடி நிலமே சொந்தமடா


ஆயிரம் ஆசையில் இதயமடா
அடிக்கடி தேவையைக் கூட்டுதடா
போகிற வரையில் போகுமடா
புத்தியும் நிலையை மாற்றுமடா
சாகிற வாழ்வென உணர்ந்திடடா
சரியான பாதையில் நடந்திடடா
கோரமாய் வாழ்வும் மாறுதடா
குடிகளும் உணர மறந்தரடா…!

ஆறடி நிலமே சொந்தமடா
அதனை மறந்தால் வினையதடா
கோடியில் துன்பங்கள் குவியுதடா
கும்பிட்ட தெய்வமும் மயங்குதடா
மாடியாய் வீடுகள் கிளம்புதடா
மடியில் கனமும் ஏறுதடா
ஆடியே அடங்கி வீழ்ந்திடடா
அப்புறம் உணர்ந்து அழுதிடடா…!

ஒருபிடி சாம்பலில் அடங்குமடா
உலகத்தின் நியதி உணர்ந்திடடா
மறுபடி பிறப்பதை மறந்திடடா
மாண்புறு வாழ்வினைத் தொடங்கிடடா
சரிசெய்யும் நீதிகள் கோடியடா
சார்ந்தே வாழ்ந்தால் இன்பமடா
பரிசிலைப் போல் வாழ்ந்திடடா
பக்குவம் வந்தால் நல்லதாடா…!

மனதின் அழுக்கினைப் போக்கிடடா
மாபெரும் பாதகம் தவிர்த்திடடா
உனதென நினைத்ததன் பயனிதடா
ஊருக்குப் போகுமுன் உதறிடடா
மனிதராய் வாழ்வதில் மயக்கமடா
மாற்றான் பொருளுக்கோ ஏக்கமடா
உலகினில் உனக்கோ ஆறடிதான்
உணர்ந்தால் நல்லதோ பூமிக்கடா

ஹேமா ஹைதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *