டிரம்ப் போட்டிருந்த மேலுமொரு தேர்தல் வழக்கை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
மிச்சிகன், பென்ஸில்வேனியா, ஜோர்ஜியா, விஸ்கொன்ஸின் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கவேண்டும் என்று டெக்ஸாஸ் மாநில நீதியமைச்சர் மூலமாக டிரம்ப் தயார் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்தது அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம். இந்த வழக்கை 17 ரிபப்ளிகன் ஆளும் மாநிலங்கள், 126 ரிபப்ளிகன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துக் கையொப்பமிட்டிருந்தார்கள்.
“குறிப்பிட்ட நான்கு மாநிலங்களின் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் சட்டபூர்வமாக எந்த வழியில் டெக்ஸாஸ் மாநிலத்தின் தேர்தல் முடிவுகளுக்கு இடையூறாக இருக்கின்றன, என்று அந்த வழக்குக் கோரலில் ஆதாரமாக நிரூபிக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டு வழக்கை ஏற்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். அமெரிக்காவின் ஒரு மாநிலம் மற்றைய மாநிலங்கள் தேர்தலை நடத்தும் தகுதியற்றவை என்று வழக்குப் போடுவது அமெரிக்க சரித்திரத்திலேயே நடந்ததில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் டிரம்ப் ஆதரவாளர்களிடையே நடாத்தப்பட்ட கணிப்பீடுகளில் தொடர்ந்தும் அவர்கள் டிரம்ப் சொல்வது போல தேர்தல் முடிவுகள் பொய்களால் நெய்யப்பட்டவை என்றே நம்பிவருகிறார்கள். அவர்கள் வழக்குகளுக்காகத் தொடர்ந்தும் டிரம்ப்பின் நிதிக்குப் பணம் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்