Featured Articlesசெய்திகள்

பாடங்களை வகுப்பறைக்கு வெளியே நடத்த பாரிஸ் நகரமுதல்வர் யோசனை.

மீண்டும் மரநிழல் கல்வி போதனையை நாடவேண்டிய காலம் வந்திருக்கிறது.


பாரிஸ் பாடசாலைகளில் வகுப்புகளை இயன்றளவு வெளியே பொது இடங்க ளில் நடத்தவேண்டும் என்று நகர மேயர் ஆன் கிடல்கோ யோசனை வெளியிட்டி ருக்கிறார். காலநிலை இடமளித்தால் அதனை நடைமுறைப்படுத்த விருப்பம் கொண்டுள்ளார் என்று கல்வி அமைச் சரும் தனது ஆதரவைத் தெரிவித்திருக் கிறார். டென்மார்க் போன்ற வேறு நாடுகளில் இத்திட்டம் பலனளித் துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

போதிய காற்றோட்ட வசதியைக் கொண்டிராத வகுப்பறைகள் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பான இடங்களாக உள்ளன. எனவே மாணவர்களது பாட போதனையை இயன்றளவு வெளி இடங்களில், மரநிழல்களில் நடத்தலாம்.
கோடை வெயில் காலம் அதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

பாரிஸ் பிராந்தியத்தில் வார இறுதி நாட்களில் பொதுமுடக்கத்தை அமுலுக்கு கொண்டுவருவது என்ற அரசின் முடிவை எதிர்க்கின்ற மேயர் கிடல்கோ, நாட்டை, நகரங்களை முடக்குவதற்குப் பதிலாகப் புதிய சில சுகாதாரக் கட்டுப்பாட்டு யோசனைகளை முன்வைத்துள்ளார். ஆசிரியர்களினதும் பள்ளிப் பிள்ளைகளினதும் நலன் கருதி பாடங்களை வகுப்பறைகளுக்கு வெளியே காற்றோட்டமான சூழலில் நடத்துவது அவற்றில் ஒரு யோசனை ஆகும். பாலர் மற்றும் ஆரம்ப நிலை வகுப்புக்களை வகுப்பறைக்கு வெளியே நடத்துவது சாத்தியம் என்று தெரிவிக்கப் படுகிறது.

பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் அதனை வரவேற்று உள்ளன. ஸ்கன்டிநேவியன் நாடுகளில் இந்த நடைமுறை ஏற்கனவே நல்ல பலனை தந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *