பிரான்ஸில் பத்து கி. மீற்றர் பயணக் கட்டுப்பாடு நீக்கம், கல்லூரிகள் ஆரம்பம்.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்கின்ற நான்கு கட்டத் தளர்வுகளில் முதலாவது கட்டம் பிரான்ஸில் திங்கட்கிழமை அமுலுக்கு வந்தது.

முதலாவது கட்டத்தில் முக்கியமாக வதிவிடத்தில் இருந்து பத்துக் கிலோ மீற்றர்கள் என்ற நடமாடும் கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. நாட்டுக்குள் தூரப்போக்குவரத்துகளுக்கு முதல் கட்டுப்பாடு எதுவும் இல்லை. அனுமதிப்படிவ நடைமுறையும் இருக்காது. ஆனால் இரவு ஊரடங்கு நேரத்தில் மாற்றம் எதுவும் இல்லை. ஊரடங்கு நேரத்தில்நடமாடுவதற்கு அனுமதிப் படிவம் அவசியமாகும். எதிர்வரும் 19ஆம் திகதியில் இருந்தே ஊரடங்கு நேரம் இரவு ஒன்பது மணியாக மாற்றப்படும்.அன்றைய தினத்தில் இருந்தே உணவகங்களின் வெளி இருக்கைகள், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் என்பன திறக்கப்படவுள்ளன.

கல்லூரிகள் மற்றும் உயர் தர (collèges et lycées) மாணவர்கள் விடுமுறைக்குப் பின் ஒரு வாரம் வீட்டில் இருந்து கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்த பின்னர் திங்கள் முதல் வகுப்பறைகளுக்குத் திரும்புகின்றனர். மோசமான தொற்று உள்ள மாவட்டங்களில் 50 வீதமானவர்கள் மட்டுமே வகுப்பறைக் கல்வியைத் தொடர்வர்.

அதிபர் மக்ரோனின் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற கால அட்டவணை நடைமுறைக்கு வருவதாயின் தொற்றுக்களது எண்ணிக்கை ஒரு லட்சம் குடியிருப்பாளர்களில் 400 என்ற கணக்குக்குக் கீழே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப் படமாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதல் கட்டத் தளர்வுகள்  நடைமுறைக்கு வருகின்றபோதிலும் பாரிஸ் பிராந்தியத்தின் Val-d’Oise Val-de-Marne, தமிழர்கள் அதிகம் வசிக்கும் Seine-Saint-Denis ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 400 என்ற எண்ணிக்கைக்குக் குறையவில்லை என்பதை ஞாயிறு மாலை வெளியாகிய சுகாதார அறிக்கைகள் காட்டுகின்றன.

 குமாரதாஸன்.                       பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *