சீன விண்கலத்தின் விலகிய பாகம் மாலைதீவு அருகே கடலில் வீழ்ந்தது.

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் விண்கலத்தின் பெரும் பாகம் இந்து சமுத்திரத்தில் மாலைதீவுகள்
அருகே கடலில் வீழ்ந்தது என்று அறிவிக்கப்படுகிறது.

பீஜிங் நேரப்படி ஞாயிறு காலை 10.15 மணியளவில் விண்கலத்தின் எரிந்த பாகங்கள் கடலில் வீழ்ந்தன என்பதை சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ள னர். கடலில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டனவா என்பது உடனடியாகத் தெரிய வரவில்லை.

பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த விண்கலத்தின் பாரிய அந்தப் பாகம் ஒன்று நியூசிலாந்து, இந்தோனேசியா, அல்லது மேற்கு ஐரோப்பா போன்ற ஏதேனும் ஒரு பகுதியில் விழலாம் என்று கடந்த சில தினங்களாக எதிர்பார்க் கப்பட்டது.

விண்கலப் பாகம் பூமியில் வீழ்வதற்கு முன்னரே அதனை சுட்டு வீழ்த்துவது உட்படப் பல வழி முறைகள் கைவசம் உள்ள போதிலும் அவ்வாறு செய்யத் தீர்மானிக்கப்படவில்லை என்று அமெரிக்காவின் பென்ரகன் அதிகாரி தெரிவித்திருந்தார்.

பூமியில் சுமார் 70 வீதம் கடற்பகுதி என்பதால் அது பெரும்பாலும் கடலில் வீழ்வதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று விண்வெளி அறிவியலாளர்கள் கூறியிந்தனர். ஆயினும் வாழ்விடங்களில்
வீழ்ந்து விடக்கூடும் என்ற அச்சம் உலக மக்கள் மத்தியில் காணப்பட்டது.

“Long March 5B rocket” என்ற பெயர் கொண்ட சீனாவின் விண்கலம் கடந்த மாதம் விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. சீனா புதிதாக அமைத்துவருகின்ற விண்வெளி நிலையத்துக்கான ஒரு முக்கியபாகத்தை எடுத்துச் சென்ற அந்த விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது. சுமார் 18 தொன் எடை கொண்ட அதன் பெரும் பாகம் ஒன்று விலகி பூமியை நோக்கி வரத் தொடங்கியது. ஆனால் பூமியின் வளிமண்டலத்தில் பிரவேசிக் கும் போதே அது வெப்பத்தில் எரிந்து பல துகள்களாகப் பிரிந்து போகும் வாய்ப்புக் காணப்பட்டது.

விண்கலங்கள் பூமியில் வீழ்கின்ற இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஓராண்டுக்கு முன்பு சீனாவின் மற்றொரு விண்கலப் பாகம் ஆபிரிக்காவில் ஐவரி கோஸ்ட்(Ivory Coast)
நாட்டின் கிராமம் ஒன்றில் வீழ்ந்து சேதங்களை ஏற்படுத்தி இருந்தது. சீனா தனது விண்கலங்கள் குறித்துப் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது.

நாடுகள் ஏட்டிக்குப் போட்டியாக விண் வெளிக்குக் கலங்களையும் ரொக்கெட் டுகளையும் அனுப்பி வருவதால் அண்டவெளி ஆபத்தான பகுதியாக மாறிவருகிறது. பழுதடைந்த, அல்லது விபத்துக்குள்ளான கலங்களின் சிதைவுகள் சுற்றுப் பாதையில் கைவிடப் படுவதால் அங்கு அவை பெரும் கழிவுகளாகச் சேர்ந்து வருகின்றன.
அவற்றில் சில பூமியில் வீழும் ஆபத்தும் ஏற்படுகின்றது.


குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *