அரிதான புது வைரஸ் தொற்றினால் Bordeaux நகரில் கட்டாயத் தடுப்பூசி!

பிரான்ஸின் தென்மேற்கே அமைந்துள்ள போர்தோ(Bordeaux) துறைமுக நகரின் பல நிர்வாகப் பிரிவுகளில் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பிராந்திய சுகாதாரப் பணியகம் (l’Agence régionale de Santé) இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

கொரோனா வைரஸின் மாற்றமடைந்த பல கிரிமிகள் தேசிய அளவிலும் சர்வதேச ரீதியாகவும் பரவி இருப்பது தெரிந்ததே. அத்தகைய மாற்றமடைந்த வைரஸ் வகைகளில் பிரான்ஸில் மிக அரிதாகக் காணப்பட்ட ஒரு புதிய மரபு வைரஸ் போர்தோ பகுதியில் திடீரென 50 பேருக்கு-ஒரு கொத்தணியாகத்-(cluster) தொற்றி உள்ளது.

இங்கிலாந்து, இந்தியா போன்ற பெயர் களில் அழைக்கப்படுகின்ற வைரஸ் திரிபுகள் போன்றே “கவலைக்குரிய”அந்தத் திரிபு மேலும் வேகமாகப் பரவுவதைத் தடுப்பதற்காகவே நிபந்தனைகள் இன்றி வளர்ந்தோர் அனைவருக்கும் அங்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

போர்தோ பிராந்தியத்தில் Bacalan என்னும் பகுதியிலேயே மிக அரிதான அந்த வைரஸ் (“very rare” variant) குடும்ப வைபவம் ஒன்றின் மூலம் 46 பேருக்குத் தொற்றி உள்ளது. அது மரபு அடிப்படையில் இங்கிலாந்து வைரஸை ஒத்ததாக இருப்பினும் அதிலிருந்து மேலும் மாற்றமடைந்த ஒரு புதிய மரபு வரிசையைக் கொண்டது எனச் சந்தேகிக்கப்படுகிறது என்று Nouvelle-Aquitaine பிராந்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆலோசகர் Patrick Dehail தெரிவித்திருக்கிறார்.

பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மிக அரிதாகக் காணப்பட்டஅந்த மாற்றமடைந்த இங்கிலாந்து திரிபுஒரேயடியாகப் பெரும் எண்ணிக்கையானோருக்குத் தொற்றி இருப்பது இதுவேமுதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் அது குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போர்தோ நகரின் வடக்கே உள்ள Bacalan நிர்வாகப் பிரிவு வாசிகளுக்கு ஏற்றுவதற்காக 19 ஆயிரம் தடுப்பூசி மருந்து அவசர மாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *