நாடுகளுக்கேயிடையினான அவநம்பிக்கை அதிகரிக்கும்போது உயிரியல் ஆயுதங்களின் ஆராய்ச்சியும் அதிகரிக்கலாம்.

கொரோனாக் கிருமிகளின் மூலம் எங்கேயென்று ஆராய்ந்து அறிவேண்டுமென்ற அரசியல் கோரிக்கை பல பக்கங்களிலும் அதிகரித்து வருகிறது. அக்கிருமிகள் சீனாவின் வுஹான் ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டவையே என்ற கருத்து பிரிட்டன் – நோர்வீஜிய ஆராய்ச்சியொன்றால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசு தனது உளவு அமைப்பிடம் அதன் மூலத்தைக் கண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

பிரிட்டனில் நடந்துகொண்டிருக்கும் ஜி 7 நாடுகளின் மாநாட்டிலும் அதேபோன்ற ஒரு கோரிக்கை எழுந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவோ தமது ஆராய்ச்சி நிலையத்தில் அப்படியான உயிரியல் கிருமி ஆராய்ச்சிகள் நடந்துவந்திருக்கவில்லையென்று தொடர்ந்தும் மறுத்தே வருகிறது.

பிரெஞ்ச் – சீனக் கூட்டுறவு ஆராய்ச்சித் திட்டமாகவே வுஹான் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் கட்டியெழுப்பப்பட்டது. பிரெஞ்ச் ஆராய்ச்சியாளர்களுடன் தாம் அங்கு ஆராய்ச்சிகள் செய்துவந்ததையும், அதன் முதல் ஆராய்ச்சியாளர்கள் பிரான்ஸில் பயிற்சிபெற்றதையும் சீனா சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன் வருடாவருடம் சர்வதேச அமைப்பொன்றினால் எல்லா ஆராய்ச்சி நிலையங்களும் பரீட்சிக்கப்படுவதுபோலவே வுஹானும் செய்யப்பட்டு வந்திருக்கிறது.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு வுஹானுக்கு விஜயம் செய்திருந்தபோது சீனா முழுசாக ஒத்துழைக்கவில்லை என்று சில ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தார்கள். அதே சமயம் அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களே அங்கே ஆராய்வுகள் நடாத்த எடுக்கப்பட்ட குறிக்கு ஏற்றபடியான விற்பன்னர்கள் தம்முடன் அங்கே வரவில்லை என்றும் குறிப்ப்பிட்டிருந்தார்கள்.

தொடர்ந்தும் வுஹான் ஆராய்ச்சி நிலையம் பற்றிய கேள்விகள் எழுப்பப்படுவது உலக நாடுகளுக்கிடையிலான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கும் என்ற குரல் சில ஆராய்ச்சியாளர்களிடமிருந்து எச்சரிக்கப்படுகிறது. உலக நாடுகள் பல நீண்ட வருடங்களாகவே வெவ்வேறு நாடுகளுடன் சேர்ந்து, ஒருவர் மற்றொருவரின் ஆராய்ச்சி நிலையத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. 

பிரான்ஸுடன் மட்டுமன்றி அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் வுஹான் ஆராய்ச்சி நிலையத்துடன் கூட்டுறவு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த ஆராய்ச்சிகளுக்கான செலவுகளைப் பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் அரசுகளே கொடுத்து வருகின்றன. வுஹான் ஆராய்ச்சி நிலையம் பற்றிய சந்தேகங்கள் எழுந்தபின் அமெரிக்கா அந்த ஆராய்ச்சி நிலையத்துடன் ஒன்றிணைந்து ஆராய்ச்சி செய்யும் அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்திவிட்டது. அவர்களிடமிருந்து வுஹான் ஆராய்ச்சி நிலையம் பற்றிய பற்பல கேள்விகள் எழுப்பப்பட்டு அவைகளுக்குச் சரியான பதில் கிடைக்கும் பட்சத்திலேயே நிதியுதவி மீண்டும் கிடைக்குமென்று அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது.

இப்படியான அரசியல் நோக்கங்கள் பல்கலைக்கழகங்கள், மருத்துவ ஆராய்ச்சிகளிடையே குறுக்கிடுவது வுஹான் ஆராய்ச்சி நிலையம் பற்றிய சந்தேகங்களால் அதிகரிக்கவிருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். அதன் விளைவாக இரண்டு நாடுகளின் வெவ்வேறு அமைப்புக்களிடையேயான ஒன்றிணைந்த ஆராய்ச்சிகள் பல நிறுத்தப்படும் ஆபத்து உண்டாவது எச்சரிக்கப்படுகிறது.

தற்போதைய நிலைமையில் அப்படியான எல்லைகள் கடந்த ஆராய்ச்சிகள் மூலம் வெவ்வேறு நாடுகள் என்னென்ன ஆராய்ச்சிகள் செய்து, அவ்விடயத்தில் எந்தக் கட்டத்தில் நிற்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவைகள் ஒருவர் மற்றொரு நாட்டுடனான சந்தேகத்தால் நடக்காத பட்சத்தில் வெவ்வேறு நாடுகள் நிலவும் அவ நம்பிக்கையால் உயிரியல் ஆராய்வுகளில் ஈடுபடுவது அதிகரிக்கும் என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *