இஸ்ராயேலின் புதிய அரசு பாலஸ்தீனர்களை ஒடுக்கும் சட்டமொன்றைத் தொடர முடியாமல் தோல்வியடைந்தது.
பாலஸ்தீனாவின் பகுதிகளான மேற்குச் சமவெளி, காஸா ஆகியவற்றில் வாழும் பாலஸ்தீனர்கள் இஸ்ராயேலுக்குள் வாழும் பாலஸ்தீனர்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு இஸ்ராயேல் குடியுரிமை கிடைக்காது என்பது இஸ்ராயேல் சட்டம். அதை மீண்டும் புதுப்பிப்பதற்காகப் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நப்தலி பென்னட்டின் புதிய இஸ்ராயேல் அரசாங்கம் தோற்றுப்போனது.
சுமார் ஒரு மாதத்துக்கு முதல் ஆட்சியமைத்த எட்டுக் கட்சிக் கூட்டணியின் யூத ஆதரவுப் பிரதமரின் பலத்தைபலவீனத்தை வெளிக்காட்டும் நடப்பாக அது பார்க்கப்படுகிறது. அந்தச் சட்டத்தைத் தொடர்ந்தும் நிலை நாட்டவேண்டும் என்பதற்காக இரவிரவாக வாதம் நடந்தது. தனது அரசாங்கத்தில் இஸ்ராயேல் யூதர்களுக்கு மட்டுமே என்று குறிப்பிடும் கட்சியையும், பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அராபியர்களின் கட்சியையும் உள்ளடக்கியிருக்கும் நப்தலிக்கு இந்தத் தோல்வி முதலாவது அடியாகும்.
“இந்தச் சட்டம் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனக் குடும்பங்களுக்கு ஒரு வெற்றியாகும்,” என்று அந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் பாலஸ்தீனர்களின் கட்சியைச் சேர்ந்த சாமி அபு ஷகாதா குறிப்பிட்டார். 59 வாக்குகள் அச்சட்டத்தைத் தொடரவேண்டுமென்றும், எதிராக அதேயளவும் கிடைத்தனர். இருவர் வாக்களிப்பதைத் தவிர்த்தனர்.
“இந்தச் சட்டம் இஸ்ராயேலின் சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் யூதர்களாக இருப்பதைத் தொடர்வதற்கு மிக அவசியமானது. இஸ்ராயேல் யூதர்களுக்கான ஒரு நாடு. எனவே இங்கே பெரும்பான்மையானவர்கள் யூதர்களாக இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று வெளிவிவகார அமைச்சர் யாயிர் லப்பிட் டுவீட்டினார்.
2003 இல் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டம் வருடாவருடம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நீட்டப்பட்டு வந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்