மன்னர்களெவரையும் இனிமேல் ஆஸ்ரேலிய 5 டொலர் நோட்டில் பதிப்பதில்லை என்றது ஆஸ்ரேலியா.
ஆஸ்ரேலியாவில் முக்கியமாகப் பேசப்பட்டு வரும் விடயங்களிலொன்று பிரிட்டிஷ் முடியாட்சிக்கும் அந்த நாட்டுக்குமிடையேயான தொடர்பு பற்றியதாகும். பிரிட்டிஷ் முடியாட்சியுடனான உறவை வெட்டிக்கொள்ளும் இன்னொரு முடிவாக நாட்டின் ஐந்து டொலர் நோட்டுக்களில் இனிமேல் மன்னரின் படம் இருக்காது என்று மத்திய வங்கி தெரிவித்தது.
ஆஸ்ரேலியாவின் தொழில் கட்சித் தலைமையும், பெரும்பான்மையான மக்களும் நாட்டை ஒரு குடியரசு என்று அறிவிக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதேசமயம் நாட்டின் பழங்குடியிருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் உரிமைகளை மேம்படுத்தவேண்டும் என்ற எண்ணமும் அதிகமாகியிருக்கிறது. ஐந்து டொலர் நோட்டுகளில் இருக்கும் மறைந்த பிரிட்டிஷ் மகாராணியின் படத்தை அகற்றிவிட்டுப் பதிலாகப் பழங்குடியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படங்களையே இனி அதில் பதிப்பது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதற்காகப் பழங்குடியினரின் பிரதிநிதிகளுடைய விருப்பங்களுக்குக் காதுகொடுக்கப்படும்.
தற்போது புழக்கத்திலிருக்கும் நோட்டுக்கள் மேலும் சில வருடங்கள் தொடரும். நாணயங்களில் அரசர் சாள்ஸ் படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்