கொல் களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு பேராதரவு அலை!

இறைச்சிக்கு வெட்டுவதற்காகக் கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டகாளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது.

பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire) என்ற இடத்தில் கடந்தவாரம் இந்தச் சம்பவம் நடைபெற்றது.

உயிரைக் காப்பதற்காக நீண்ட தூரம் ஓடி நகர மத்தியில் ஒளிந்துகொண்ட அந்தக்கன்றை தீயணைப்புப் பிரிவினர் மயக்க மருந்துடன் கூடிய ஊசி அம்பு(hypodermic arrow) எய்து பிடித்தனர். கால்நடை மருத்துவர் ஒருவரது கண்காணிப்புடன்அது ஆழ்ந்த உறக்கத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டது.மாட்டுக்கு உரிமை கோரி அதனை மீளப் பெற்றுக் கொல்களத்துக்குக் கொண்டு செல்ல அதன் உரிமையாளர் முயன்றார்.ஆனால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட மிருகங்களை 35 தினங்களுக்குப் பின்னரே இறைச்சிக்காகக் கொல்ல முடியும் என்பது சுகாதார விதி. அந்த விதி கன்றின் தலைவிதியை மாற்றியது.

காளைக் கன்று தப்பித்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவியது. அதனைக்காப்பாற்றுவதற்கான கோரிக்கை அடங்கிய இணைய மகஜர் ஒன்று திறக்கப்பட்டது. சிறிது நேர இடைவெளிக்குள்காளைக் கன்றுக்கு ஆதரவாகப் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் சேர்ந்தன. கன்றுக்கான கட்டணத்தை உரிமையாளருக்கு வழங்கி அதனைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக நிதி குவிந்தது.

“கன்று தனது உயிரைக் காத்துக் கொள்ளும் உரிமைக்காகக் காட்டிய உறுதியையும் துணிச்சலையும் கருத்தில் கொண்டு ஒர் குறியீட்டு அடையாள மாகவேனும் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது” -என்று விலங்குரிமை பேணுவோர்இணையத்தில் தமது ஆதரவைத் தெரிவித்தனர். கன்றை மீண்டும் கொல்களத்துக்கு அனுப்பவேண்டாம் என்றுகுரல்கள் எழுந்தன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் நொடிக்குள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. மாட்டுக் கன்றின் செய்தியும்அவ்வாறே வைரலாகப் பரவி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியிருக்கிறது.

Brigitte Bardot Foundation என்ற நிறுவகம் இது போன்று கொல்களங்களில் இருந்து மீட்கப்படுகின்ற ஆயிரக் கணக்கான விலங்குகளைப் பேணிப் பராமரித்து வருகிறது. தப்பியோடிய காளைக் கன்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் அது ஏற்றுக்கொண்டது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *