பெண் பொலீஸ் உத்தியோகத்தரை வெட்டிக் கொன்றவரைச் சுட்டுக்கொலை! பாரிஸ் பொலீஸ் நிலையத்தில் சம்பவம்.

பெண் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திக் கொன்ற நபர் ஒருவர் சுடப்பட்டு
உயிரிழந்தார்.

பாரிஸ் நகருக்கு தென்மேற்கே Yvelines மாவட்டத்தின் Rambouillet நகரப் பொலீஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் இந்தச்சம்பவம் இடம்பெற்றது.

துனீசியா நாட்டுப் பிரஜையான நபர் ஒருவரே பொலீஸ் நிலையத்தின் வாசலில் வைத்துப் பொலீஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் கத்தியால் பல தடவைகள் தாக்கினார் என்று கூறப்படுகிறது. அவசர முதலுதவிப் படையினர் அங்கு வருவதற்குள் 49 வயதான பெண் உத்தியோகத்தர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தாக்குதலாளியைக் கைது செய்ய முயன்ற சமயம் பொலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவரும் கொல்லப்பட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பிரதமர் Jean Castex, உள்துறை அமைச்சர் Gérald Darmanin இருவரும் சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்கின்றனர் என ஊடகங்கள் குறிப்பிட்டன.

சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்ற அமைதியான Rambouillet நகரில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

37 வயதுடைய தாக்குதலாளி ருனீசியாவில் இருந்து 2009 ஆம் ஆண்டு பிரான்ஸ் வந்துள்ளார். தீவிரவாத நடவடிக்கைகள்
தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகிறது. அவரது நோக்கம் தெரியவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவினர் சம்பவம் தொடர்பான விசாரணை
களைப் பொறுப்பேற்றுள்ளனர்.

உயிரிழந்த பெண் பொலீஸ் அலுவலருக்கு அஞ்சலி செலுத்தும் பதிவு ஒன்றை அதிபர் மக்ரோன் தனது ருவீற்றரில் வெளியிட்டுள்ளார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *