இலங்கை அதிபரது ஹொட்டேலுக்குவெளியே தமிழர் ஒன்று கூடி எதிர்ப்பு!

ஸ்கொட்லாந்தில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தங்கியுள்ள ஹொட்டேலுக்கு வெளியே தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிபர் கோட்டாபய தலைமையில் இலங்கையின் உயர்மட்ட அரச குழுவினர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வருகை தந்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தின் மத்திய பகுதியில் Dunblane என்னும் இடத்தில் ராஜபக்சே குழுவினர் தங்கியுள்ளனர் எனக் கூறப்படும் ஹொட்டேலுக்கு வெளியிலேயே அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகத் தமிழர்கள் ஒன்று கூடி வருகின்றனர். அவர்கள் ராஜபக்சே குழுவினர் ஹொட்டேலில் இருந்து வெளியேறி மாநாட்டு மண்டபத்துக்குச் செல்வதைத் தடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அப்பகுதியில் பொலீஸ் பிரசன்னம் அதிகம் காணப்படுகிறது.

இலங்கையின் இறுதிப் போரில் நிகழ்ந்தஇன அழிப்புகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுவரும் கோட்டாபயவின் வருகைக்கு பல்வேறு வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற முயற்சிகளில் ஸ்கொட்லாந்தில்வசிக்கும் ஈழத் தமிழர்கள் கடந்த சிலநாட்களாக ஈடுபட்டுவருகின்றனர். இலங்கை அதிபரை ஓர் “இன அழிப்புக் குற்றவாளி” எனக் குறிப்பிடும் பிரசுரங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் பல அங்கு காட்சிப்படுத்தப்பட்டு வெளியாகியுள்ளன.

பருவநிலை மாநாட்டை ஒட்டி நடைபெறுகின்ற பக்க நிகழ்வுகளில் ஒன்றில் சிறீலஙகா அதிபர் கோட்டாபய நேற்று உரை நிகழ்த்தியுள்ளார். இலங்கை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசியஅவர், சுற்றுச் சூழலைச் சீரழிக்காமல்விவசாயத்தில் புரட்சி செய்வது குறித்துவலியுறுத்தினார்.சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தாமல் விவசாய உற்பத்தியை மேம்படுத்த நவீன விஞ்ஞான நுட்பங்களையும் நடைமுறைகளையும் பயன்படுத்துவதே இப்போது நாம் எதிர்கொள்ளும் சவாலாகும். பல தசாப்தங்களாக, நீண்டகால சிறுநீரக நோய் இலங்கையின் விவசாய மையப்பகுதியில் ஒரு தீவிர பிரச்சினையாக உள்ளது.

இரசாயன உர வகைகளின் அதிகப்படியான பாவனையானது இந்தப் பிரச்சினைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் பின்னணியில், இரசாயன உர இறக்குமதியைக் குறைப்பதற்கும், மாற்று வளங்களை வலுவாக ஊக்குவிப்பதற்கும் தமது அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சிறீலங்கா அதிபர் கோட்டாபய தெரிவித்தார்.

குமாரதாஸன். பாரிஸ்.