பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் வெள்ளத்தில், இலங்கையின் வடமேற்கில் பலர் வீடிழந்தனர்.

காலநிலை அவதானிப்பு நிலையங்கள் எச்சரித்தது போலவே தாழமுக்கம் ஒன்று தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதி, மன்னார் குடா, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளைத் தாக்கி வருகிறது. விளைவாக ஏற்பட்டிருக்கும் கடும் மழையால் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் கடந்த நாட்களில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இம்மாதத்தில் இதே பகுதிகளில் உண்டாகியிருந்த மழை, கடும் காற்று ஆகியவை கலந்த காலநிலையால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளே மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றன. வீடுகள், கட்டடங்கள், வயல்கள் பலவற்றுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதால் மக்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள்.

தமது வீடுகளை இழந்துவிட்ட சுமார் 2,300 குடும்பங்கள் தற்காலிகமாக வேறிடங்களில் தங்கிவருகிறார்கள். தொடர்ந்து வரும் நாட்களிலும் இப்பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சி இருக்கும் என்கிறது வாநிலை அவதானிப்பு மையம். மீன்பிடிப்புத் தொழிலார்களை கடலுக்குப் போகவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்