ஷீயா மார்க்கத்தினரினரில் ஒரு பகுதியினர் ஈராக்கிய நீதியமைச்சின் வாசலில் கூடாரம் அமைத்துப் போராட்டம்.

சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் ஈராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் எந்த ஒரு கட்சியினரோ, கூட்டணியினரோ பெரும்பான்மைப் பாராளுமன்ற இடங்களைப் பெறாததால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முடக்க நிலைமை தொடர்கிறது. ஏற்கனவே நாட்டின் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராடிவரும் முக்தடா அல்- சாதிர் ஆதரவாளர்கள் நாட்டின் நீதியமைச்சின் வாசலை மறித்திருந்து போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாராளுமன்றக் கட்சிகள் எதுவும் அரசும் அமைக்காமல், மற்றவர்களை அரசமைக்கவும் விடாமல் முடமாக்கியிருக்கிறார்கள். அதனால், நாட்டில் இடைக்காலப் பிரதமராக முஸ்தபா அல் கடிமி தொடர்கிறார். அவருடைய தலைமையை விரும்பாத சாதிர் ஆதரவாளர்கள் எதிர்த்தரப்பினர் முன்வைக்கும் எந்தத் தலைமையையும் ஏற்க மறுக்கிறார்கள்.

ஈராக்கின் அரசியல், நீதி யாவுமே ஊழல்களால் பின்னப்பட்டிருக்கிறது. தற்போதைய எந்த ஒரு அரசியல்வாதியையும் ஏற்கத் தயாராக இல்லை என்கிறார் சாதிர். அரசியல் கட்சிகளெதிலும் பங்கெடுக்காத அவர் தனது ஆதரவாளர்களைத் தூண்டிச் சகல அரசியல்வாதிகளும் தமது பதவிகளை விலகவேண்டும் என்கிறார். புதிய தேர்தல் நடத்த நீதிமன்றத்துக்குச் சாதிர் கொடுத்திருந்த அவகாசம் முடிந்ததாலேயே அந்த அமைச்சின் முன்னர் அவர்கள் போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

உண்டாகியிருக்கும் நிலைமையைப் பேச்சுவார்த்தைகளால் தீர்க்கலாம் என்று கேட்டுக்கொண்டிருக்கும் பிரதமர் அல் – கடிமி வன்முறைகளில் ஈடுபடாமலிருக்குமாறு சகல தரப்பினரையும் வேண்டிக்கொண்டிருக்கிறார். நீதியமைச்சின் ஊழியர்கள் தமது அலுவலகத்தின் வேலைகளைக் காலவரையின்றி நிறுத்திவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *